பணத்தோட வாங்க படம் எடுத்து தருவார்! : எப்படியெல்லாம் யோசிக்குது அதர்வா மூளை!
அரை டஜன் படங்களில் ஹீரோவாக நடித்த பிறகு சொந்தமாக தயாரிப்பில் இறங்க ஆரம்பித்து விடுகிறார்கள் இப்போதுள்ள இளம் ஹீரோக்கள்.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இவர்கள் வரிசையில் நடிகர் அதர்வாவும் இப்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ‘செம போதை ஆகாத’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
பெரும்பாலும் சொந்தப்படம் எடுக்கும் ஹீரோக்கள் சொந்தப்பணத்தைப் போட்டு படமெடுப்பார்கள். அல்லது பைனான்ஸ் வாங்கி படமெடுப்பார்கள். ஆனால் அதில் கூட ரொம்பவே உஷாராக படமெடுக்க ஆரம்பித்திருக்கிறாராம் அதர்வா.
எப்படி?
தன்னை வைத்து படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களிடம் நல்ல கதையை வெச்சிருக்கிற இயக்குநரோட வாங்க, எனக்கு சம்பளமெல்லாம் வேண்டாம் என்று சொல்லி முதலில் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதிலிருந்து தயாரிப்பாளர்கள் மீண்டு வருவதற்குள் அந்த அதிர்ச்சியில் இன்பம் காணாமல் போய் விடுகிறது அடுத்து அவர் சொல்லும் பதிலில்!
”மொத்தமா இவ்ளோ பணத்தை (கோடிகளில் ) கொடுத்துடுங்க.., நானே என்னோட பேனர்ல இந்த படத்தை தயாரிச்சு பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உங்ககிட்ட தந்துடுறேன்” என்று வியாபாரம் பேசுகிறாராம்.
”படம் எடுக்கிறதுல இது ரொம்பப் புதுசா இருக்கே” என்று அதர்வா சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படுவதை விட தலை தெறித்து ஓடுகிறார்களாம் நாலு காசு சம்பாதிக்கலாம் என்கிற ஆசையில் வரும் தயாரிப்பாளர்கள்.
எப்படியெல்லாம் யோசிக்குது அதர்வாவோட மூளை?