அண்ணனோட டீமுக்கு தம்பி விளம்பர தூதர்! : கேப்டன் வாரிசுகளின் கெட்டிக்காரத்தனம்
பிள்ளைகளுக்கு எதில் ஆர்வமோ அதில் அவர்களை வளர விடுவது தானே ஒரு அப்பாவின் கடமை.
அந்தக் கடைமையை தனது இரண்டு மகன்களுக்கும் நிறைவேற்றியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.
இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் என்பது தெரிய வரவும் அவருக்காக படம் தயாரித்து ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
இப்போது இரண்டாவது படத்தில் பிஸியாகியிருக்கிறார் சண்முகப்பாண்டியன்.
அதேபோல மூத்தமகன் விஜய பிரபாகரனுக்கு விளையாட்டில் ஆர்வம். அவர் ஆசைப்பட்ட மாதிரியே சென்னை பேட்மிண்டன் அணியை விலைக்கு வாங்கி, அந்த அணிக்கு என்று ‘சென்னை ஸ்மாஷர்ஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார் விஜய பிரபாகரன்.
இந்த அணியின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் தன்னுடைய அணியில் உள்ள வீரர், வீராங்கனைகளை அறிமுகப்படுத்திய விஜய பிரபாகரன்
“எனக்கு சின்ன வயசிலிருந்தே ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இண்ட்ரஸ்ட். அதனால என் அப்பாவோட ஆதரவால் இந்த அணியை வாங்கியிருக்கேன்.
இந்த அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்காங்க. குறிப்பா சொல்லணும்னா இந்தியாவுக்காக விளையாடிய பி.வி.சிந்து எங்களோட சென்னை அணிக்காக விளையாடுறது எங்கள் அணிக்கு பலம்.
சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரி சோப்ரா (Jerrychopra), கிருஷ்ண பிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ் ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோரும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் முக்கிய விளையாட்டு வீரர்கள். என்று சொன்ன விஜய பிரபாகரன் அணியினருக்கு பயிற்சி கொடுக்க கங்குலி பிரசாத்தை நியமித்திருக்கிறார்.
இப்படி அணியைப் பற்றி விளக்கிய விஜய பிரபாகரன் அடுத்து ஒருவரை அறிமுகப்படுத்தியது தான் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.
சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக தனது தம்பியும் நடிகருமான சண்முக பாண்டியனை நியமித்திருக்கிறார்.
ஏன் இப்படி ஒரு முடிவு? என்பது தான் நிருபர்களின் கேள்வியாக இருக்கும் என்பதால் கேள்வி எழுமுன்பே அவரே பதிலைச் சொன்னார்.
“என்னோட தம்பிங்கிறதுல சண்முக பாண்டியனை எங்கள் அணிக்கு விளம்பரத் தூதரா போடல. ஒரு விளம்பர தூதருக்கு உயரம் ரொம்ப முக்கியம், அதனால தான் எங்க டீம் அவரை செலெக்ட் பண்ணியிருக்கு என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவில் இருப்பது போல தனது சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் லோகோவிலும் சிங்கமுகத்தை வைத்திருக்கிறார் விஜய பிரபாகரன்.
“நான் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர். போன ரெண்டு வருஷமா சென்னை அணி ஐபிஎல் போட்டியில் இல்லாததால் அந்த அணியை ஞாபகப்படுத்துற வகையில சிங்க லோகோவை வைத்துள்ளோம். அது மட்டுமல்ல, சென்னை கிரிக்கெட் அணிக்கு விசில் போடு, சென்னை புட்பால் அணிக்கு சுத்தி போடு என்ற முழக்கம் இருப்பது போல சென்னை பாட்மிண்டன் அணிக்கு ஸ்மாஷர்ஸ் போடு என்ற முழக்கத்தையும் எங்கள் அணிக்கு வைத்துள்ளோம்” என்றார்.