ஓவியா இருக்க பயமேன்? : தயாரிப்பாளர் ஆனந்த கண்ணீர்!
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்பு ஓவியாவின் சினிமா கேரியருக்கு மட்டும் நல்லது செய்யவில்லை. அவரை நாயகியாக்கி ஏற்கனவே படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கும் பெருத்த நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.
ஓவியா நடிப்பில் ‘சீனி’ என்ற படத்தை தயாரித்தவர் மதுரை செல்வம். பல மாதங்களாக தயாரிப்பில் இருந்த அந்தப்படம் சந்திக்காத சிக்கல்கள் இல்லை.
அப்படிப்பட்ட படத்தை இப்போது ரிலீஸ் செய்ய முயற்சியெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் செல்வம். அதற்கு காரணம் ஓவியாவுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் அமோக வரவேற்பு தான். அதற்காகவே ‘சீனி’ என்ற டைட்டிலை தூக்கி விட்டு ‘ஓவியாவை விட்டா யாரு?’ என்று படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
ராஜதுரை இயக்கிய இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் செல்வத்தின் பேச்சைக் கேட்டு அங்கு வந்திருந்த அத்தனை பேருடைய மனசும் இரக்கப்பட்டு விட்டது.
”இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறதுக்குல்ல நான் படாத கஷ்டங்கள் இல்லை. இந்த நேரத்துல கூட படத்தோட டைரக்டர் ராஜதுரை எனக்கு சம்பளப்பாக்கி வெச்சிருக்காருன்னு எம்மேல கவுன்சில்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார். ஆனா அவருக்கு எந்த சம்பளப்பாக்கியும் நான் வைக்கவில்லை என்று தழுதழுத்தவர் இந்த கஷ்டங்களுக்கு மத்தியில் இன்னைக்கு நான் படத்தை ரிலீஸ் பண்ற தெம்புக்கு வர்றதுக்கு ஓவியா தான் காரணம்.
சில தினங்களுக்கு முன்பு டீஸர் பங்ஷனுக்கு கூப்பிடுறதுக்காக ஓவியாவுக்கு போன் போட்டேன். அண்ணா… என்னால இப்ப வர முடியல. ஆனா படம் ரிலீசாகிற நேரத்துல கண்டிப்பா புரமோஷனுக்கு வர்றேன். நீங்க கவலைப்படாதீங்க, உங்க கஷ்டமெல்லாம் இந்தப் படத்துல தீர்ந்திடும்” என்று ஆறுதல் சொன்னாராம்.
அதை விழா மேடையில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு அழுத செல்வம் ஓவியா தங்கச்சி கண்டிப்பா இந்த அண்ணன் உன்னோட ஆசீர்வாத்துல ஜெயிப்பேன்மா என்றார் தயாரிப்பாளர் செல்வம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஓவியா வெளியேறிய பிறகு வர இருக்கும் படம் இது என்பதால் இப்படத்தை வாங்கி திரையிட இப்போதே விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவி வருகிறதாம். இதனால் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலம் கிடைத்து விட்ட உற்சாகத்தோடு படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளை முடிக்கி விட்டிருக்கிறார்கள்.
ஓவியா இருக்க பயமேன்!