சிவகார்த்திகேயன் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்! – நெகிழ்ந்து போன படக்குழு
சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பது தமிழ்சினிமா பிரபலங்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
‘கிளாப்போர்டு’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு திடீர் விசிட் அடித்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அவரின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன். அதோடு இப்படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டு எல்லோரையும் வாழ்த்தியிருக்கிறார்.
‘எரும சாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் இப்படத்துக்கு ஜோஷுவா ஜெ பெரேஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார்.
“சிவகார்த்திகேயன் சாரின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றிருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி.
எங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயன் சாருக்கு, எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த கொள்கிறோம்” என்று சிவகார்த்திகேயனின் வருகை குறித்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளரும், நடிகருமான வி.சத்யமூர்த்தி.