ஷூட்டிங்கே ஆரம்பிக்கல… அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படத்தை வளைத்துப் போட்ட சன் டிவி!
‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் சூரி காமெடியனாக நடிக்கிறார். ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கும் புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘இன்று நேற்று நாளை’ படத்தைப் போல் சயின்ஸ் பிக்ஷன் படமாக தயாராகப் போகும் இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் நாயகி, டைட்டில் உள்ளிட்ட எந்த தகவல்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்கப்படாத நிலையில் இப் படத்தின் சாட்டிலைட் உரிமையை, சன் டிவி வாங்கியுள்ளது.
சிவகார்த்திகேயனின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வசூலை வாரிக் குவித்து வருவதால் அவருடைய படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க விஜய் டிவியும், ஜீ தமிழ் நிறுவனமும் போட்டி போட்டு வருகின்றன.
அந்த இரு நிறுவனங்கள் கைகளில் படங்கள் இந்தப்படம் போய் விடக்கூடாது என்பதற்காகவே படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே சிவகார்த்திகேயன் – ஆர்.ரவிக்குமார் கூட்டணியில் தயாராகப் போகும் படத்தை முன்கூட்டியே வளைத்துப் போட்டிருக்கிறது சன் டிவி.