மே 30 முதல் தமிழ்சினிமா ஸ்டிரைக்! : விவசாயிகளை சந்திக்காத பிரதமர் விஷாலை சந்திப்பாரா?

Get real time updates directly on you device, subscribe now.

vishal

41 நாட்கள் விதவிதமான போராட்டங்களை நடத்தியும் கூட, நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளை சந்திக்க மறுத்து விட்டார் இந்திய நாட்டின் பிரமதராக இருக்கும் மோடி!

இந்த நிலைமையில் ”எங்களுடைய இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் சரி செய்யா விட்டால் வருகிற மே 30 முதல் படப்பிடிப்பு ரத்து, பட ரிலீஸூக்குத் தடை, தியேட்டர்கள் இயங்காது” என பல கோரிக்கைகளை அதிரடியாக முன் வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

அவர்கள் வைத்திருக்கும் பிரச்சனைகளில் தமிழ்சினிமாவின் பெரிய தலைவலியாக இருக்கும் ”ஆன்லைன் பைரஸி”யும் முக்கியமான
ஒன்று.

இது குறித்து நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் பேசிய விஷால் அங்கு வெளியிட்ட கோரிக்கைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

மத்திய அரசுக்கான கோரிக்கைகள் :

1.) ஜி.எஸ்.டி என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.

2.) திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST யாக இருக்க வேண்டும்.

3.) திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.

4.) மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

5.) புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் ஜி.எஸ்.டி மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.

6.) திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை.

Related Posts
1 of 69

vishal1

மாநில அரசுக்கான கோரிக்கைகள் :

1.) திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை , இருக்கும் இடம் , ரசிகர்களுக்கு தரும் வசதிகள் , பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

2.) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1000 நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.

3.) திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

4.) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.

5.) உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6.) ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.

7.) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

8.) இந்த துறையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.)

இந்தக் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தரும் வரை தமிழ்சினிமா காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று தெரிவித்தார் விஷால்.

மக்கள் பிரச்சனைகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் திரைப்படத் துறையினரின் இந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா? விவசாயிகளை சந்திக்க விரும்பாத மோடி விஷாலை சந்திப்பாரா? என்பதையெல்லாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.