‘அட்மின் மேல பழி போடுறது தான் இப்போ ட்ரெண்ட்’ – ஹெச்.ராஜாவை கலாய்த்த விஜய் சேதுபதி
ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிஸியான நேரத்திலும் கூட ’96’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடித்த இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய இப்படம் அக்டோபர் 4-ம் தேதி ரிலீசாகிறது.
இதையொட்டி நம்மோடு பேசிய விஜய் சேதுபதி பி.ஜே.பியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து அவர் பேசியதாவது, ”இந்த படம் டைரக்டர் பிரேம் குமாரால் தான் துவங்கப்பட்டது. செக்கச் சிவந்த வானம் படத்தை கூட எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து பார்க்குமாறு கூறினோம்.
ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதால் பயமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் இதை தாண்டி பெரிய பயம் இருக்கிறது. எங்களின் பயத்தை சந்தோஷமாக மாற்றப்போது ரசிகர்கள் தான். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.
என்றவரிடம் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பேசியவர் ”என் வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. சர்வே தான் நடந்தது. நான் 3 வருடமாக அட்வான்ஸ் வரி தான் கட்டி வருகிறேன்.
இது என்னுடைய ஆடிட்டரால் வந்த குழப்பம். அவர் மூன்று வருடங்களாக வரியை கட்டாமல் மொத்தமாக கட்டியதால் வருமானவரி அதிகாரிகள் சர்வே செய்து விட்டு குழப்பம் தீர்ந்ததாக சொல்லி விட்டனர். என் வீட்டுல நடந்தது சர்வேதான்னு வந்த அதிகாரிகள் சொன்னார்கள். அது ரெய்டு என்று மாற்றி செய்திகள் வந்து விட்டது.
ஒரு விஷயம் தவறாகச் சொன்னால் தான் வேகமாகப் பரவும். நல்லதுதான் இதனால பப்ளிசிட்டிதான் கிடைக்கும். சமீபகாலமாக தமிழ்நாட்டில் பொது வெளிகளில் சத்தமாக பேசுவதுதான் ட்ரெண்ட்டாகி விட்டது. இப்படி பொது வெளியில் கத்தி பேசிவிட்டு நான் பேசல அட்மின் பேசுனாரு, இல்ல மிமிக்ரி பண்ணாங்க’னு அட்மின் மேல பழியை போட்டு தப்பிக்கிறது தான் இப்போ ட்ரெண்டா இருக்கு. அது மாதிரி ரெய்டு நடந்ததாக சொல்லப்பட்ட என் வீடும், அலுவலகமும் என் வீடும், அலுவலகமும் இல்லை. என் வீடு, அலுவலகம் மாதிரி செட் போட்டு ரெய்டு பண்ணாங்க. அவ்வளவுதான்” என்று ஹெச்.ராஜாவை செமையாக கலாய்த்துப் பேசினார் விஜய் சேதுபதி.