இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் செய்யாத சாதனையை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ரிலீசான ”பாகுபலி 2” திரைப்படம் செய்திருக்கிறது.
ஆமாம், ஏப்ரல் 28-ம் தேதி ரிலீசான இப்படம் ரிலீசான 10 நாட்களுக்குள் சுமார் 1000 கோடியை வசூல் செய்து சரித்திர சாதனை படைத்திருக்கிறது.
பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசான இந்தப்படம் வெளியான எல்லா இடங்களிலும் இன்றுவரை ஹவுஸ்புல் காடசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இப்படத்தின் வசூல் ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், வெளிநாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கி பின், வெகு சீக்கிரத்திலேயே தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது.
இந்த சரித்திரப் படைப்பில், அமரேந்திர பாகுபலியாக தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். அதோடு இப்படத்திற்காக கிட்டத்தட்ட 5 வருடங்கள் தனது உழைப்பைக் கொட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, ”பாகுபலி 2” வுக்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், படத்தின் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி அவர்களுக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
”பாகுபலி 2” படத்தின் மூலம் இந்திய சினிமா சரித்திரத்தில் ”1000 கோடி கிளப்” என்கிற புதிய வெற்றிச் சாதனை அடையாளத்தையும் பிரபாஸ் ஆரம்பித்து வைத்திருக்கிறார் என்பது பெருமைக்குரிய ஒன்று என்று கொண்டாடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.