2. ஓ, காலா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த இரண்டில் எந்தப்படம் முதலில் ரிலீசாகும் என்கிற குழப்பம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரம்மாண்டப்படமான 2.ஓ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ம் தேதி துபாயில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்த ரஜினி நேற்று இரவு சென்னை திரும்பினார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் நிலவிய குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான பதிலைத் தந்தார்.
” முதலில் 2.ஓ படம் தான் ரிலீசாகும். அதற்குப் பிறகு தான் காலா ரிலீசாகும்” என்றார் ரஜினி.
முன்னதாக 2.ஓ படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஏப்ரல் 14-ம் தேதி காலா வெளியாகும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியிருந்தார்.
ஆனால் ஜனவரி 25-ம் தேதி அக்ஷய் குமாரின் பேட்மேன் (Padman) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், அந்தத் தேதியில் 2.ஓ வெளிவராது என்பது உறுதியானது. இதனால் ஏப்ரல் 13-ம் தேதிக்கு 2.ஓ தள்ளிப் போனதாகக் கூறப்பட்ட நிலையில், லைகா நிறுவனம் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தான் காலாவுக்கு முன் 2.ஓ வெளியாகிவிடும் என்று கூறியிருக்கிறார் ரஜினி. ஆக 2.ஓ படம் ஏப்ரல் 13-ம் தேதியும், காலா ஆகஸ்ட் மாதத்திலும் வெளியாகக் கூடும் என்கிறார்கள்.