தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட்டுக்குப் போய் சாதித்த இயக்குநர்கள் லிஸ்ட்டில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எப்போதுமே தனி இடமுண்டு.
தமிழில் வெளியான கஜினியை ஹிந்தியில் ரீமேக் செய்து வெற்றிப்படமாக்கியதால் அங்குள்ள மாஸ் ஹீரோக்கள் பலரும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் நடிக்கக் காத்திருக்கும் அளவுக்கு பிரபலமானார்.
இதற்கிடையே தமிழில் விஜய்யை வைத்து கத்தி ஹிட்டைக் கொடுத்தவர் அடுத்து தெலுங்கு, தமிழில் இருமொழிப்படமாக தயாராகி வரும் புதிய படத்தில் மகேஷ்பாபுவை ஹீரோவாகப் போட்டு இயக்கி வருகிறார்.
இந்தப்படம் முடிந்த பிறகு மீண்டும் விஜய்யுடன் புதுப்படம் ஒன்றில் இணைகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இப்படி பிஸியாகப் போய்க்கொண்டிருந்தாலும் ஹிந்தியில் சல்மானைக்கானை வைத்து ஒரு பிரம்மாண்டப்படத்தை எடுக்க தயாராகி வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்காக சல்மான்கானை நேரில் சந்தித்து கதையெல்லாம் சொல்லி விட்டு வந்தார்.
ஆனால் என்ன ஆனதென்று தெரியவில்லை. அந்தப்படம் வெறும் பேச்சு வார்த்தையோடு நின்று விட்டது.
எதற்காக அந்தப்படம் நின்றது என்பதற்கான காரணம் இன்றுவரை முருகதாஸுக்கு தெரியவில்லை. இருந்தாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.