செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் “ஆறாம் வேற்றுமை”.
இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். எழுதி இயக்கி இருப்பவர் ஹரிகிருஷ்ணா.
இயக்குனர் ஹரி கிருஷ்ணாவிடம் படம் பற்றி கேட்டோம்.. ”இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம் ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ஆறாம் வேற்றுமை என பெயர் வைத்தோம்.
தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம். நமக்கு அறிமுகமான மொழியே இல்லை இந்த படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் இடம் ஓர் இனம் ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது..
ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான்…நாகரிக வாழ்க்கையை வாழ்கிறான். அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான்.
இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப் பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே போக வேண்டி இருந்தது. எல்லோருமே எங்களது முயற்சியையும் கதை பற்றிய நம்பிக்கையையும் மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டார்கள். இந்த திரைப்படத்தைப் பார்த்து பிடித்துப் போய் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்
ஸ்ரீ முத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர் ஆர்.பாலசந்தர். படத்தின் முழு படப்பிடிப்பும் தர்மபுரி சேலம் அரூர் அதிராம்பள்ளி போன்ற இடங்களில் உள்ள காடுகளில் நடைபெற்றுள்ளது. ஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அபோகலிப்டோ’ போன்ற படம் தான் இந்த ‘ஆறாம் வேற்றுமை’ என்றார் இயக்குனர் ஹரிகிருஷ்ணா.