அதற்கு பதில் கொடுக்கும் விதமாக அதிதி மேனனை நான் திருமணம் செய்தது உண்மை தான் என்று அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார் அபி சரவணன்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, ”எனக்கும் அதிதி மேனனுக்கும் 2016ல் ‘பட்டதாரி’ படத்தில் நடிக்கும் போது அறிமுகம் ஏற்பட்டது. அவர் ‘நெடுநல்வாடை’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் இயக்குனருக்கும் அதிதிக்கும் பிரச்சனையானது. அதைத் தொடர்ந்து அந்த இயக்குனர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு கூறியதுடன் மேலும் தற்கொலைக்கும் முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தது.
அப்போது அதிதியின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும் வாழ்த்தும் பெற்று 2016 ஜூன் 9ஆம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். அதன்பின் மதுரையிலும் அதைத் தொடர்ந்து சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டிலும் கடந்த மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அந்த வீட்டின் ஒப்பந்தப் பாத்திரம் ஆதிரா சந்தோஷ் கணவர் பெயர் சரவண குமார் என்றே போடப்பட்டிருக்கும். கடந்த மூன்று வருடங்களில் கேரளாவில் உள்ள அதிதி வீட்டிற்கு 10-க்கும் மேலான தடவை சென்று அவரது பெற்றோருடன் தங்கி இருந்து வந்துள்ளோம்.
கடந்த நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், நாங்கள் தங்கிருந்த வீட்டை எனக்கே தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்கள், கார், பைக் மற்றும் பீரோவில் இருந்த நகை, பணம், எனது 2 செல் போன், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அதன் பின்னர் அதை விசாரித்த போது அவர் சுஜித் என்ற நபருடன் தவறான உறவில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது. சுஜித்தை நேரில் அழைத்து விசாரித்த போது அவர்களுக்கிடையேயான கள்ள காதலை ஒப்புக்கொண்டார்.
மூன்று வாரங்களுக்கு மும்பு அதிதி அவரது ஆண் நண்பர் சுஜித்துடன் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பதாக தெரிந்ததை அடுத்து அவருடன் சமாதானம் பேச சென்றேன். அப்போது நான் அதிதியுடன் பேச முயன்ற போது என்னை பேசவிடாமல் தடுத்து தாக்கியதால் நான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
இவை அனைத்தும் நடந்து கொண்டு இருக்கும் போதுதான், என் மீதும் நான் செய்துவரும் சமூக பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார்.
நேற்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு கொடுத்து, எனது திருமணம் சட்டப்படி செல்லும் என்பதையும் தமிழக அரசு பதிவுத்துறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் என்றும் சார்பதிவாளர் மூலம் பெற்ற ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.எங்கள் திருமணம் லீகலா இல்லையா என்பது பற்றி சட்டபூர்வமான விசாரணை போய்க்கொண்டிருக்கிறது..
ஆனால் சமூகம் சம்பந்தமான எனது பணிகளை கொச்சைப்படுத்தி, என்னை அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். இந்த சமூகத்தில் எனக்கு இருந்த நற்பெயரை கெடுத்து விட்டார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் விவசாய போராட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் மூலம் கிடைத்த நிதியை முறைகேடாக எனது சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்..
மதுரையில் நான் வாங்கிய வீடு என்னுடைய தந்தையின் ஓய்வூதிய பணத்தை முன் தொகையாக செலுத்தி வாங்கப்பட்ட வீடு.. அந்த வீட்டின் மதிப்பு மொத்தம் 27 லட்சம் ரூபாய். அதற்கு 20 லட்சம் ரூபாய் வங்கியில் கடனாக பெற்றுள்ளோம்.. அந்த வங்கிக்கடன் கூட எனது தந்தையின் வயது காரணமாக அவருக்கு கிடைக்கவில்லை என்பதால் என் பெயரிலும் என் அக்கா பெயரிலும் சேர்த்து வங்கிக்கடன் பெற்றோம். முன் தொகைக்காக என் தந்தையின் ஓய்வூதியப் பணமும், நாங்கள் ஏற்கனவே குடி இருந்த வீட்டின் அட்வான்ஸ் தொகை ஐந்து லட்சமுமாக சேர்த்து மொத்தம் அந்த 7 லட்சத்தை தயார் செய்தோம்.
என்னுடைய தந்தை அவருடைய பல வருட உழைப்பில் கிடைத்த ஓய்வு ஊதியத் தொகையை கொண்டு தனக்கென சொந்தமாக இப்போதுதான் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். ஆனால் அந்த வீட்டையும் இப்படி முறைகேடாக சம்பாதித்த பணத்தில் நான் வாங்கி இருக்கிறேன் என்று கூறி அவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.
நான்கு கார்களுக்கும் சேர்த்து தனித்தனியாக வங்கிக்கடன் பெறுவதற்காக நான் செலுத்திய மொத்த முன்தொகை சுமார் மூன்றரை லட்சம் ரூபாய்தான். இதில்கூட மீதி ஒரு லட்சம் ரூபாயை எனது தந்தை, வீட்டிலிருந்த நகையை அடமானம் வைத்துதான் எனக்கு கொடுத்துள்ளார். அவர் நகை அடமானம் வைத்ததற்கான ஆதாரமும் அந்தப்பணத்தை எனக்கு வங்கி கணக்கு மூலம் கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
நான் இந்த சமூகத்தின் மீதான ஆர்வத்தில், எனது சொந்த விருப்பத்தின் பேரில் ஜல்லிக்கட்டு, விவசாய புரட்சி போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்காக தோள் கொடுத்ததை அதிதி கொச்சைப்படுத்தி உள்ளார். 2017ல் ஜல்லிக்கட்டு விஷயத்திலும் விவசாய போராட்டத்திலும் கலந்து கொண்டதில் நான் முறைகேடு செய்திருந்தால் கடந்த இரண்டு வருடமாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது திடீரென அது பற்றி புகார் செய்வது ஏன்?.. அப்போதே அவற்றை தெரியப்படுத்தி இருக்கலாமே..?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்த காலம் என்று ஒன்று இருக்கும்.. அவரும் கடந்த காலத்தில் ஒரு பையனை காதலித்து கொச்சியில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.. கேரளாவில் ஒருவரை நிச்சயதார்த்தம் செய்த நிலையில் அவரை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார் அதிதி. இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது.
தற்போது சுஜித் என்பவருடன் தொடர்பில் உள்ளார் என்கிற தகவல் எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி அவர் அளித்த புகாரில் எங்கேயும் அவர் குறிப்பிடவில்லை.. மேலும் அந்த சுஜித்துடன் அதிதி மேனனுக்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் அவர்களின் குடும்பத்தார் ஈடுபட்டுள்ள தகவலும் எனக்கு தெரியவந்தது.. அந்தப் பையன் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. இளமுருகு எனும் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன்..
அவரது ஈமெயிலை ஹேக் செய்து அவருடைய சான்றிதழ்களை திருடி விட்டதாக இன்னொரு ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். எங்களது திருமணம் நடைபெற்றபோது, பதிவாளர் முன்பு அவர் கையெழுத்திட்டது உட்பட அனைத்துமே சாட்சிகளாக ஆதாரங்களாக இருக்கின்றது. என்னை திருமணம் செய்யவில்லை என்றால் எப்படி என்னுடன் மூன்று வருடம் சேர்ந்து வாழ முடியும்..? என்னுடன் அவர் தங்கியிருந்த வீட்டிற்கான ஒப்பந்த பத்திரமே அபி சரவணனின் மனைவி என அவர் பெயரில் தானே போடப்பட்டிருக்கிறது.
அவர் தனது கள்ளக்காதல் விவகாரத்தை திசை திருப்புவதற்காக என் மீது எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுநாள்வரை நான் அவர் மீது எந்த தனிப்பட்ட புகாரும் கொடுக்கவில்லை. இந்த விவகாரம் பற்றி அவரிடம் கேட்க போனபோது அவருடன் இருந்த அவரது ஆண் நண்பர்கள் என்னை தாக்க முயற்சி செய்தார்கள் என்பதால்தான் அவர்கள் மீது, நான் காவல்துறையில் புகார் அளித்து உள்ளேன். 3 ஆண் நண்பர்களுடன் தங்கி இருந்த அதிதி மேனன் எதற்காக என்னிடம் சமாதானம் பேச அவரது நண்பர் ஒருவரை அனுப்பி வைக்க வேண்டும்..? அதுவும் இரவு 12 மணிக்கு..!
மேலும் திருவனந்தபுரம் எல்லைக்குள் வரக்கூடாது என என்னை காவலர்கள் எச்சரித்து அனுப்பியதாக ஒரு குற்றசாட்டு சொல்லி இருந்தார்.. ஆனால் நான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களுக்கும் மேலாக திருவனந்தபுரத்தில் தான் காவல்துறை அனுமதியுடன் நடந்தது.” என்று தனது தரப்பு நியாயங்களை முன் வைத்தார் அபி சரவணன்.