”இங்கே நேர்மைக்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது” – கார்த்தி வேதனை

ய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா மார்ச் 19-ம் தேதி கோவையில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார் , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய கார்த்தி போலீசின் மனசுமையை குறைக்க அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. எனக்கு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது.
இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படபோவது யாரு என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர் தான். போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்ய முடியும்.

நள்ளிரவிலும் வேலை செய்கிறார்களே போலீஸ் அதிகாரிகள் அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா? என்று என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். அப்படி இரவு பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறக்கட்டளை வேண்டும்.

அப்படிப்பட்ட அறக்கட்டளையை தான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம். இந்த அறகட்டளை இப்போது பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகளையும் , ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் ஒரு அரணாக இருக்கும். இது பொதுமக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இது கண்டிப்பாக மேலும் வளரும்.

இங்கே இருக்கும் போலீஸ் அதிகாரிகள் தூங்காமலேயே வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பிரஷர் அதிகமாகிறது. பிரஷர் அதிகமாவதால் தான் அவர்கள் மக்களிடம் கோபப்படுகிறார்கள். அவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் தூங்க நேரம் கொடுக்க வேண்டும். அதேபோல் இன்னும் நிறைய போலீஸ் அதிகாரிகளை புதிதாக பணியமர்த்தினால் தான் தூங்காமல் அனைவரும் வேலை செய்யும் நிலை மாறும்.

அவர்களுக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை கிடையாது. அவர்கள் மனதளவில் சந்தோஷமாக இருந்தால் தான் அவர்கள் நம்மோடு பேசும் போது சந்தோஷமாக பேசுவார்கள். நாம் நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளை புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களை பற்றி தவறாக மட்டும் தான் பேசுகிறோம். நாமும் நிறைய மாற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

போலீஸ் அதிகாரிகளின் மனச்சுமை குறைய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என்றார் கார்த்தி.
இந்த அறகட்டளைக்கு நடிகர் கார்த்தி, சக்தி மசாலா, ராம்ராஜ் காட்டன், வனிதா மோகன், ஆறுமுகசாமி ஆகியோர் ரூபாய் 10லட்சம் விகிதம் 50 லட்சம் அறகட்டளைக்கு நிதியாக வழங்கினர்.

actor karthiKarthiKarthi SpeechTamilnadu Policetn governmentTN Police
Comments (0)
Add Comment