பின்னணி நடனக் கலைஞரான திருமதி. ஜமுனா அவர்கள் தமிழ் திரைப்படங்களில் பின்னணி நடனகுழுவுடன் பல்வேறு திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.
இவர் பழைய படங்களில் நடிகை சரோஜாதேவி, பானுமதி போன்றோருடன் பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். திருமதி. ஜமுனா அவர்கள் அந்த காலத்தில் தமிழ்த் திரையுலகையே புரட்டி போட்ட “கர்ணர்”, “ஒளவையார்” போன்ற மாபெரும் படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர், சிவக்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரின் கணவர் சினிமா உலகில் புகழ்பெற்ற ஒப்பனை கலைஞர் ஆவார்.
சில தினங்களுக்கு முன்பு திருமதி. ஜமுனா அவர்கள் சென்னையில் வடபழனி சாலையில் கையேந்தி பிச்சை எடுத்து கொண்டு இருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது, நான் சினிமாவில் பல உயரங்களை அடைந்துள்ளேன். பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் இன்று நான் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளேன். தற்போது சினிமாவில் நலிந்த கலைஞருக்கும், கஷ்டப்படும் கலைஞருக்கு உதவி செய்யும் நபர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் இந்த வீடியோவை பார்த்து விட்டு எனக்கும் உதவி செய்வார் என நம்புகின்றேன் என்று அவர் கூறினார்.
இதைப் பார்த்த நடிகர் விஷால் அவர்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்து அவருடைய மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி கிருஷ்ணனையும் உடனே அவர்களை சந்தித்து தேவையான உதவி செய்யுமாறு அனுப்பினார். அப்போது திருமதி. ஜமுனா அவர்களிடம் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டாம். எனக்கு மாதம் மாதம் உதவித்தொகை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றுவோம் என்று கூறி புது துணியைக் கொடுத்ததோடு மேலும் மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்கவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
“தேவி அறக்கட்டளை” மூலம் நடிகர் விஷாலின் மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற ஹரி கிருஷ்ணன் இந்த உதவித் தொகையை அளித்தனர்.