படம் எடுப்பதை விட அதை ரிலீஸ் செய்து போட்ட பணத்தை திருப்பி எடுப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நவம்பர் 3-ம் தேதி ரிலீசான விழித்திரு திரைப்படம் நல்ல படம் என்கிற பெயரை விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெற்று இன்றுவரை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு சிறிய படம் ரிலீஸ் செய்வதற்கு பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவே பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு எந்த ஒரு சிக்கலும் வருவதில்லை. மீறி வந்தால் கூட அதை ரிலீஸ் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் பலரால் முன்வந்து செய்யப்படுகிறது. இந்த வேறுபட்ட பார்வையைத் தான் கடுமையாகச் சாடினார் நடிகை தன்ஷிகா.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ‘விழித்திரு’ படம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் தன்ஷிகா.
அப்போது பேசிய அவர், ”எங்கள் இயக்குனர் மீரா கதிரவன் இந்த படத்தை வெளியிட கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் போராட்டம் நடத்தினார். எத்தனை இன்னல்கள், துயரங்கள்? இருந்தும் போராடி இந்த படத்தை வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளோம்.
திடீரென்று ஸ்டிரைக் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததால் விழித்திரு படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. நவம்பர் 3-ம் தேதி தான் ரிலீஸ் செய்ய முடிந்தது. ஆனால் “தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மட்டுமே வேலைகள் வேகவேகமாக நடந்தது. எங்கள் படத்தை கவனிக்கவில்லை.
ஆக ஒரு பெரிய படத்துக்கு ஒரு பிரச்சனை என்றல் எல்லோரும் ஓடி வந்து உதவி செய்கிறார்கள். அதுவே சிறிய படமென்றால் யாருமே அவ்வாறு உதவிகளைச் செய்வதில்லை. ,
காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்பது தான் எனக்கு அப்போது தான் புரிந்தது.” என தன்ஷிகா வெளிப்படையாகவே விஜய் படத்தை பற்றிக் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் “நான் இப்போது கூட தைரியமா பேசவில்லை என்றால் வேறு எப்போது பேச முடியும்? என்றார் தன்ஷிகா.