அடுத்த வீட்டில் எப்போது சந்தோஷம் குறையும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நடிகை அமலாபால் – இயக்குநர் விஜய் ஜோடியின் விவாகரத்து இனிப்பான செய்தியாக மாறி விட்டது.
உருக உருக அமலாபாலை காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்த இயக்குநர் விஜய் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டே ஆண்டுகள் ஆன நிலையில் பிரியப்போவதாக அறிவித்து விட்டார்.
“எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என கனவில் கூட நான் நினைத்ததில்லை, ஆனால் இன்றைக்கு அது நடந்துவிட்டது” இதுதான் பிரிவுக்கு இயக்குநர் விஜய் சொன்ன காரணம்.
ஒரு ஜோடி பிரிய முடிவெடுத்தால் அவர்கள் இடையே இருக்கிற மனக்கசப்புகளை பேசித்தீர்த்து மீண்டும் அவர்களை ஜோடியாக வாழ வைப்பது தான் மனித தர்மம்.
ஆனால் அமலாபால் விவகாரத்தில் பல நடிகைகள் அவருக்கு கொம்பு சீவி விடும் வேலையை மறைமுகமாக செய்து வருகிறார்கள். சிலர் நீங்கள் எடுத்தது தைரியமான முடிவு, இந்த உலகில் ஆண் துணை இல்லாமல் வாழ முடியும் என்று பெண்ணியம் பேசி அமலாபாலை விவாகரத்து நோக்கி போகச் செய்து விட்டார்கள்.
இதற்கிடையே கேரள நடிகையான மம்தா மோகன் தாஸ் அமலாபால் முடிவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து கருத்து சொல்லியிருக்கிறார்.
“ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மனைவியான பிறகு குடும்பத்தை பார்க்க வேண்டும், கணவரை கவனிக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்கள் வருகிறது.
கணவன்மார்கள், நடிகைகள் தனக்கு உணவு சமைத்து, துணிகளை துவைத்து குடும்ப வேலைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் திருப்தி ஏற்பட்டால் தான் வேலைக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றைய நடிகைகள் தங்களுக்கு பாதுகாப்பின்மை இருப்பது போன்று உணர்கிறார்கள்.
பெண்கள் தங்களுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று யாரேனும் கருதினால் அவர்கள் நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாம்” என்பது தான் மம்தா மோகன்தாஸின் கருத்தாக இருக்கிறது.
இதுக்கும் மேல பெண்களுக்கு என்னப்பா சுதந்திரம் வேணும்..?