‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் ‘ஒல்லி பெல்லி’ இசையமைப்பாளர் அனிருத்.
துக்கி நிறுத்தினால் கூட பத்து பதினைந்து கிலோ தான் தேறுவார். அப்படிப்பட்ட அனிருத்துக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள்.
அதுவும் இங்கில்லை தெலுங்கில்!
தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத், தமன் போன்றவர்கள் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்து வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக போட்டியே இல்லாமல் இருந்த இந்த இருவருக்கும் பலத்த போட்டியாளராக அங்கு போய் சேர்ந்திருக்கிறார் அனிருத். வழக்கம் போல தனது படங்களில் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் கை கோர்க்கும் இயக்குநர் திரு விக்ரம் இந்தப் படத்தில் முதல் முறையாக அனிருத்தை களமிறக்கியிருக்கிறார்.
தமிழில் நானும் ரெளடி தான், வேதாளம், சிங்கம் 3 என பெரிய பட்ஜெட் படங்களை வைத்திருக்கும் அனிருத் நிதின் ஹீரோவாக நடிக்க திரு விக்ரம் இயக்கும் அ… ஆ… ( அனுஷ்யா ராமலிங்கம் VS ஆனந்த் விகாரி ) என்ற தெலுங்கு படத்துக்கு இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார். இந்தப்படத்துக்கு இசையமைக்கத்தான் அனிருத்துக்கு சம்பளமாக 1.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கு படங்களில் இசையமைக்க இதுவரை தமன் 60 முதல் 80 லட்சம் வரையும், தேவி ஸ்ரீ பிரசாத் 1 கோடி வரையும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அனிருத்தோ அவர்களையும் மிஞ்சி சம்பளம் வாங்கி விட்டதில் மேற்படி இசையமைப்பாளர்கள் கொஞ்சம் மிரண்டு தான் போயிருக்கிறார்கள்.