கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து வரும் படம் தான் இமைக்கா நொடிகள்.
‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் அதர்வா, நயன்தாரா மற்றும் ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் ஹிந்தி திரையுலகின் தலைச் சிறந்த இயக்குனரான அனுராக் காஷ்யப்.
‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக அனுராக் காஷ்யப் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறந்த படைப்பாளியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் பெருமையும், புகழும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படக்குழுவினருக்கு இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“ஏ.ஆர் முருகதாஸ் சாரின் ‘அகிரா’ படத்தில், கருணையற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து, ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்றவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். எங்களின் ‘இமைக்கா நொடிகள்’ கூட்டணியில் அவர் இணைந்திருப்பது, எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ருத்ரா என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார். வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும், இதுவரை தமிழ் ரசிகர்கள் ஒரு திரில்லர் படத்தில் கண்டிராத புதுமையான வேடத்தில் அவர் நடிக்க இருக்கிறார் ” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஏ.ஆர் முருகதாஸிடம், ‘7 ஆம் அறிவு’ மற்றும் ‘துப்பாக்கி’ படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.