‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘பரதேசி’, அதைத் தொடர்ந்து ‘சண்டி வீரன்’, ‘ஈட்டி’ என பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.
அரை டஜன் படங்களைத் தாண்டி விட்டாலும் இன்றும் அவர் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இல்லை. இருந்தாலும் தனது தொடர் முயற்சியை கை விடாதவராக தற்போது ‘செம போத ஆகாத’ படத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
படத்தின் டைட்டில் கிக் ஏற்றும் விதமாக இருந்தாலும் கதை அப்படிப்பட்டது இல்லையாம். போதையில் நாம் எடுக்கிற சில முடிவுகள் பெரிய சிக்கலைக் கொண்டு வந்து சேர்த்து விடும். அப்படி ஒரு சிக்கலை சந்திக்கிற ஹீரோ அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் கதையாம்.
அந்த வகையில் போதை மனிதர்களுக்கு பகை என்கிற நல்ல கருத்தைத் தான் படத்தில் சொல்லியிருக்கிறாராம் இப்படத்தின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். அதர்வாவின் அறிமுகப்படமான பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தான் இப்படத்தின் இயக்குனர்.
அவருக்காகவே தான் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்ததாகக் கூறிய அதர்வா ”என்னுடைய சினிமா கேரியரில் முதல் படமான பானா காத்தாடி வெற்றிப்படமாக அமைந்தது. அந்த இயக்குனரின் அடுத்த படம் குறித்து அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்தப் படத்தின் கதையை பத்ரி என்னிடம் சொன்னார். எனக்குப் பிடித்ததால் நானே தயாரித்து விட்டேன்.
பின்னர் யாரை இசையமைப்பாளராகப் போடலாம் என்று பேச்சு வந்த போது யோசிக்காமல் யுவனை போட்டு விட்டோம். அவருடைய இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் அதர்வா.
அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்தி,அனைகா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படம் ஜூன் 29-ம் தேதி ரிலீசாகிறது.