உலக அளவில் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரம்மாண்டமான இந்தியப்படம் என்கிற பெருமையைப் பெற்ற படம் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ரிலீசான ‘பாகுபலி’.
இதன் இரண்டாம் பாகமும் இப்போது சுடச்சுட தயாராகி வருகிறது.
முதல் பாகத்தை எப்படியோ பல தடங்களுக்கு மத்தியிலும் எடுத்து விட்ட இயக்குநர் ராஜமெளலி இரண்டாம் பாகத்துக்கு அதிக மெனக்கிடல் செய்ய வேண்டியிருக்கிறது.
முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் ரசிகர்களை கூடுதலாக கவர வேண்டும். அதோடு வசூலும் முதல் பாகத்தை மிஞ்ச வேண்டும் என்பதால் இரண்டாம் பாகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து தான் எடுத்து வருகிறார்.
இதனாலேயே படப்பிடிப்பு நாட்களும் அதிகமாகிக் கொண்டே போகிறது. என்றாலும் அதில் நடிக்கின்ற நடிகர், நடிகைகள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் அந்த படப்பிடிப்பு நாட்களை குறைத்து விடலாம் என்று யோசித்தவர் எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறார். அப்படியிருந்தும் கூட இயற்கை அனுஷ்காவின் மூலமாக பெரும் இம்சையைக் கொடுத்து வருகிறது.
கத்தரி வெயிலுக்கு முன்பே கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அந்த வெயில் தெலுங்கானாவில் நடைபெற்று வரும் பாகுபலி படப்பிடிப்பையும் விட்டு வைக்கவில்லை. 110 டிகிரிக்கும் மேல் ஆந்திராவில் வெயில் அடிப்பதால் பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் உள்ள அனுஷ்காவால் வெயிலை தாக்குப்படிக்க முடியவில்லையாம்.
இதனால் வேறு வழியில்லாமல் அனுஷ்காவுக்காக வெயிலின் தாக்கம் குறையும் வரை படப்பிடிப்பை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் ராஜமெளலி.