”’பர்த் மார்க்’ சாதாரண விஷயம் கிடையாது!”- இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க்’. ‘பர்த் மார்க்’ திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது,

“‘பர்த் மார்க்’ நிச்சயம் புது அனுபவம் உங்களுக்குக் கொடுக்கும். நம் வாழ்விலும் ‘பர்த் மார்க்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை பார்த்துச் சலித்த கதைகளைப் போல இல்லாமல் புதிதாக எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் சுகப்பிரசவம் பற்றி விக்ரம் ஒரு விசயத்தைக் கூறினார். அதைப்பற்றி படிக்கும்போது நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் தெரிய வந்தது. இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால் படமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் 1990 களில் நடக்கிறது. கார்கில் போருக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய டேனி என்ற இராணுவவீரர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை தன்வந்திரி என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் அந்த கிராமம்.

அங்கு தம்பதிகள் சந்திக்கும் மனப்போராட்டங்கள், மாற்றங்களைத் த்ரில்லர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இந்த கிராமத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை அமைத்தோம். ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். ஷபீரும் கடுமையாக உழைக்கக்கூடியவர். வருகிற பிப்ரவரி 23 அன்று இந்தப் படம் வெளியாகிறது. படம் பார்த்து முடித்ததும் தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இந்தக் கதை ஏற்படுத்தும். இதைத்தான் உணர்த்த விரும்பினோம்” என்றார்.

Actor Shabir KallarakkalActress MirnaaBirth Mark movieDirector Vikram Sreedharan