இரண்டு தேசிய விருதுகள் பெற்ற ‘கேப்டன் மில்லர்’!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும், இப்படத்தில் தனது ஆழமான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், சிறப்பு பாராட்டு (Special Mention) விருதையும் பெற்றிருப்பது படக்குழுவினருக்கும், சத்யஜோதி பிலிம்ஸுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸுக்கு இந்த தேசிய அங்கீகாரம் வெறும் விருதாக மட்டுமல்ல; ஏழு தசாப்தங்களாக, மூன்று தலைமுறைகள் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகள், கலைநயம் மிக்க படைப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கி வந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.

இந்த மகத்தான பயணத்தின் தொடக்கம் 1950-களின் இறுதியில் வீனஸ் டி. கோவிந்தராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட ‘கல்யாண பரிசு’ (1959) திரைப்படத்தின் மூலம் அமைந்தது. அத்திரைப்படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்று, இந்த குடும்பத்தின் தேசிய விருது பயணத்திற்கு அடித்தளமிட்டது. அதைத் தொடர்ந்து ஆர். எம். வீரப்பன் தயாரித்த ‘ரிக்ஷாக்காரன்’ (1972) திரைப்படம் மூலம் மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்று, இந்திய திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத சாதனையை படைத்தார்.

இந்தச் சிறப்புமிக்க பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் டி.ஜி. தியாகராஜன். அவரது தலைமையில் சத்யஜோதி பிலிம்ஸ், தமிழ் சினிமாவின் மிகவும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது. அவர் தயாரித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்று, நடிகர் கமல்ஹாசன் அவர்களின் முதல் தேசிய விருதிற்கும் காரணமாக அமைந்தது. இது தரமான மற்றும் கலைநயம் மிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் சத்யஜோதி பிலிம்ஸின் உறுதியை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

Actor DhanushCaptainMiller movie