டஜன் கணக்கில் படங்களில் நடித்த எல்லா நாயகர்களுக்குள்ளும் ஒரு இயக்குநர் ஒளிந்து கொண்டிருப்பார்.
ஆனால் அவர் நேரம், காலம், தேதியெல்லாம் பார்த்து தான் வெளியில் வருவார். டஜன் கணக்கில் படங்கள் நடித்த அனுபவத்தில் இருந்து ஒரு இயக்குநர் உருவாவதெல்லாம் இப்போது எளிமை என்பதை விட எந்த அனுபவமும் இல்லாமல் இயக்குநர் ஆகுவோர் மத்தியில் எவ்வளவோ தேவலை.
தனுஷ் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக பல படங்களில் நிரூபித்து விட்டார். அவரது புகழ் பாலிவுட் மட்டுமல்ல, ஹாலிவுட் வரை கூட சென்று விட்டது. அப்படிப்பட்டவர் இயக்குநர் ஆவது என்பது ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் தான்.
தனுஷே கூட விரைவில் ஒரு படம் இயக்குவேன். அதற்கான காலம் அமைய வேண்டும் என்று மீடியாக்களை மீட் பண்ணும் போதெல்லாம் மறக்காமல் சொல்லுவார்.
இதோ சொன்னபடியே இன்று இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ்.
அதுவும் மாஸ் ஹீரோவெல்லாம் அவர் இயக்கத்தில் இல்லை. மாஸ் ஹீரோக்களுக்கே சவால்விட்ட நடிகர் ராஜ்கிரண் தான் தனுஷ் படத்தின் ஹீரோவாகியிருக்கிறார்.
பவர் பாண்டி என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தனுஷே தனது உண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார்.
இப்படத்தில் ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா நடிக்கிறார். இவர் தவிர மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால் என் ராசாவின் மனசிலே படத்தின் தனுஷின் அப்பாவும் டைரக்டருமான கஸ்தூரிராஜாவை அந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தினார் ராஜ்கிரண். அதன்பிறகு கஸ்தூரி ராஜா தமிழ்சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வந்தார்.
அதேபோல 25 வருடங்கள் கழித்து தனது முதல் படத்தில் ராஜ்கிரணை ஹீரோவாக நடிக்க வைத்து இயக்குநராக பெருமையோடு அறிமுகமாகிறார் தனுஷ்.