இன்றைய நிலையில் தனுஷூடம் ‘வட சென்னை’ பற்றி கேள்வி கேட்டால் பதில் இந்த செய்தியின் டைட்டிலைப் போலத்தான் இருக்கும் என்கிறார்கள்.
கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கும் தனுஷூக்கு ‘தொடரி’, ‘கொடி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடி.
இந்தப் படங்களை தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன் என்று தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக திடீரென்று அறிவித்தார் தனுஷ்.
அப்படியானால் மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படுமென்று சொல்லப்பட்ட ‘வட சென்னை’ படப்பிடிப்பு என்னவானது என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?
அதற்கு அதை இயக்கப் போவதாக சொல்லும் இயக்குநர் வெற்றிமாறனிடமும் பதில் இல்லை, தனுஷூடமும் பதில் இல்லை.
ஏற்கனவே பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் ‘வட சென்னை’ படத்தை இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டார் வெற்றிமாறன்.
ஆனால் இப்படி வருடக்கணக்கில் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவதைப் பார்த்தால் முதல் பாகம் எடுத்து முடிப்பதே பெரிய வேலையாக இருக்கும் போலத் தெரிகிறது.
‘வட சென்னை’ படம் ட்ராப்பாகி விட்டது என்று இடையில் செய்தி பரவிய போதும் அதை அடியோடு மறுத்தார் தனுஷ்.
அப்படியிருந்தும் அந்தப்படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருப்பதையும், தனுஷ் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து கொண்டே போவதையும் பார்த்தால் ஒருவேளை ‘வட சென்னை’ ட்ராப் ஆகி விட்டதோ? என்று தனுஷ் ரசிகர்களிடையே முணுமுணுக்க வைத்திருக்கிறது.