எந்த திரையுலக விழாவுக்கு வந்தாலும் ஆரம்பமும் சரியாக இருக்காது, முடிவும் சரியாக இருக்காது. அதாவது மைக்கைப் பிடித்து வணக்கம் உரையை நிறைவு செய்யும் போது நன்றி போன்ற வழக்கமான நடைமுறைகள் எதையுமே பின்பற்ற மாட்டார் மிஸ்கின்.
எதோ இடையிலிருந்து பேச ஆரம்பிப்பது போல ஆரம்பித்து அப்படியே விட்டு விட்டுப் போவார். அவர் பேச்சிலும் அப்படி ஒரு பிடிவாதம் இருக்கும்.
ஆனால் அப்படி எதுவும் இல்லாத ஒரு நெகிழ்ச்சியான பேச்சாக இருந்தது விருமாண்டியும் சிவனாண்டியும் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு!
அப்படத்தின் இயக்குநர் வின்செண்ட் செல்வா தான் மிஸ்கினின் குருநாதர். எந்த சிஷ்யப் புள்ளையும் இப்படி ஒரு நெகிழ்வான பேச்சை திரையுலக பிரபலங்களோ, ஊடகத்தினரோ இதுவரை கேட்டதில்லை. அந்தளவுக்கு தன் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த இயக்குநர் வின்செண்ட் செல்வாவை வரிக்கு வரி நெகிழ்ந்து பேசினார்.
”என்னை இந்த உலகுக்குக் கொடுத்த இரண்டாவது தாயாக டைரக்டர் வின்செண்ட் செல்வாவை நான் என்றும் என் மனதாரப் போற்றிக் கொள்கிறேன். நான் அவரோடு வேலை செய்த முதல் படத்திலேயே என்னுடைய பெயரை கோ – டைரக்டர் லிஸ்ட்டில் போட்டார்.
நான் லேண்ட்மார்க்ல வேலை செஞ்சிக்கிட்டு இருக்கிறப்போ தான் வின்சென்ட் செல்வா சார் என்னை அவரோட கூட்டிக்கிட்டுப் போனார்.
நான் ரொம்ப லாஜிக்கா கேள்வி கேட்பேங்கிறதுனால என்னை படத்தோட டிஸ்கஷன்ல உட்கார விட மாட்டார். உனக்கு திரைக்கதை எழுதவே வராதுன்னு சொன்னார். அதனால தான் நான் இன்னைக்கு திரைக்கதை ஆசிரியரா ஆனேன்னு நெனைக்கிறேன். அந்த கெளரவத்தை என்னோட டைரக்டருக்கே கொடுக்கிறேன்.
முந்தாநாள் ”டேய் ராஜா நீ என்னோட பங்ஷனுக்கு வருவியாடான்னு கேட்டேன். சார் என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க உங்க பங்ஷனுக்கு வரலேன்னா நான் வாழ்ந்தே என்ன சார் பிரயோசனம்?”னு சொன்னேன்.
விஷூவலா நல்லா படம் எடுக்கிறார்ன்னு என்னை எல்லாரும் பாராட்டுவாங்க. அதுக்கெல்லாம் காரணம் என்னோட டைரக்டர் தான். அவர்கிட்ட இருந்துதான் நான் அதையெல்லாம் கத்துக்கிட்டேன்.
ஒரு டைரக்டர் என்பவன் ரொம்ப பிடிவாதத்தோட இருக்கணும், எனக்கு சினிமாவுல இருக்கிற கெட்ட பேருக்குக் காரணம் என்னோட பிடிவாதம் தான்.
எங்க டைரக்டர் உண்மையிலேயே ரொம்ப பெரிய டைரக்டர். என்னமோ தெரியல அவர் போராடிக்கிட்டே இருக்கிறார். சார் நீங்க எப்போதுமே ஒரு தாயாக இருங்கள். ஒவ்வொரு குழந்தை பெற்றுக்கொள்ளும் போதும் போராட்டம் இருக்கும் அது எனக்குத் தெரியும். நான் எப்போதுமே உங்க பின்னாடி இருந்துக்கிட்டே இருக்கேன். நான் சம்பாதிக்கிறது எல்லாம் உங்களுக்குத்தான் சார் என்றார் மிஸ்கின் உருக்கமாக…
பின்னால் பேச வந்த வின்சென்ட் செல்வா ”ஒரு நாலு படம் என்கூட இருந்திருந்தா நான் நாலு ஹிட் படமாவது குடுத்திருப்பேன்னு மிஸ்கின்கிட்ட அடிக்கடி சொல்வேன். என்னோட ஆரம்பகால படங்கள் எல்லாமே நல்ல படங்களாக இருந்தது என்றால் அதற்கு மிஸ்கின் என்கூட இருந்தது தான் காரணம். என்னைப் பொருத்தவரைக்கும் அவர் இந்தியாவோட Jean-Luc Godard. அவர் மிகப்பெரிய இயக்குநர்” என்று சிஷ்யரை பெருமிதத்தோடு பாராட்டினார்.
நல்ல குரு; நல்ல சிஷ்யர்