அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வசூல் பெற்று வெற்றிப்பட லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது என்று சர்வதேச அளவில் வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை முதல் லோக்கல் கோடம்பாக்கம் டைம்ஸ் வரை செய்திகளை வெளியிட்டு விட்டன.
அஜித் ரசிகர்களோ எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு அமெரிக்காவில் 10 கோடி, ஆப்ரிக்காவில் 5 கோடி, அண்டார்டிகாவில் 8 கோடியென்று போட்டி போட்டுக்கொண்டு போட்டோஷாப் செய்து வசூலை விபரத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால் அந்த வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டிய தயாரிப்பாளரோ இதுநாள் வரை மெளனம் காத்து வருகிறார்.
அடிபட்டவருக்குத்தானே அதன் வலியும், வேதனையும் தெரியும்? என்பது போல விவேகம் பட வசூலின் உண்மை நிலவரம் பெருங்கலவரமாகிக் கிடப்பது தான் தயாரிப்பாளரின் அமைதிக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
இருந்தாலும் உள்ளதை உள்ளபடிச் சொல்லும் சில ஊடகங்களும் இருக்கத்தானே செய்யும்?
அவைகள் எல்லாமே விவேகம் மிகப்பெரிய தோல்விப்படம், மூன்றாவது நாளே தியேட்டர்களில் கூட்டம் குறைந்து விட்டது. அதன் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 சதவீதம் விவேகம் படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று தொடர்ந்து கள நிலவரத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி விவேகம் படத்தின் வெற்றிக்கு எதிரான செய்திகள் தொடர்ந்து வருவதால் அதை சமாளிக்க முடியாமல் திணறிய அஜித் ரசிகர்கள் ”விவேகம் படம் வசூல் அளவிலும் வெற்றி பெற்றது உண்மைதான். இனியும் வாங்கிய காசுக்கு உண்மையாக வேலை பார்க்கின்றோம் என்ற பெயரில் விவேகம் படத்திற்கு எதிரான செய்திகளை போட வேண்டாம்”. என்று கெஞ்சாத குறையாக வேண்டுகோள்களை கருத்துகளாக தெரிவித்து வருகிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் விவேகம் படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என்பது அதை தயாரித்தவருக்கு மட்டும் தானே தெரியும்? அவர் வாய் திறக்கும் வரை வருவது எல்லாமே வடிந்து கட்டிய பொய் தான்.