‘ரீ டேக்’ வாங்கி சமாளிச்சுக்கலாம் என்று எந்த முன்னேற்பாடும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கெளம்புகிற ஹீரோ இல்லை அதர்வா!
தேர்ந்தெடுத்து நடிக்கிற எல்லாப் படங்களுமே மன உழைப்போடு, உடல் உழைப்பையும் போடுகிற படங்கள் தான்.
அந்த வகையில் பார்த்தால் ‘ஈட்டி’யில் கேரக்டருக்காக அவர் போட்டிருக்கும் உழைப்பு அளவிட முடியாதது.
இரண்டு வருடங்களுக்கு முன் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ‘பாக் மில்க்ஹா பாக்’.
தடகள வீரர் மில்க்ஹா சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பாக் மில்க்ஹா பாக்’ படத்துக்காக நடிகர் இயக்குநர் பர்ஹான் அக்தர் கடுமையாக உழைத்து, மில்க்ஹா சிங்கின் நிஜ கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பார்.
அந்த படத்தில் மில்க்ஹா சிங்கையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய அவருடைய அர்ப்பணிப்பு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.
அப்படி ஒரு பரவசம் ‘ஈட்டி’ படத்தில் அதர்வாவைக் பார்க்கும்போதும், ரசிகர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஆமாம், ஈட்டி படத்தில் தடைஓட்ட (hurdles) பந்தய வீரராக நடித்துள்ளார் அதர்வா.
முறையான பயிற்சி இல்லாமல் தடை ஓட்டப்பந்தய வீரராக நடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அதர்வா, ஈட்டி படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன் சுமார் மூன்று மாதங்கள் நாகராஜ் என்பவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்..
நாகராஜ் காமென்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட இந்திய தடை ஓட்டப்பந்தய வீரர்களுக்கு பயிற்சி அளித்தவராம்.
‘ஈட்டி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடைபெறும் தடை ஓட்டப்போட்டியை பெங்களூருவில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ரவி அரசு.
இந்தப்போட்டியில் அதர்வா உடன் ஓடிய சக வீரர்களாக காமென்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட நிஜ வீரர்களே நடித்துள்ளனர்.
இப்படியாக அதர்வாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக உருவாகியுள்ள ‘ஈட்டி’ படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதே தேதியில் தான் சூர்யா நடித்த ‘பசங்க-2’ படமும், சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ படமும் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
எத்தனை படங்கள் வந்தால் என்ன?
‘ஈட்டி’ படத்தை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடித் தீர்ப்பதற்கான காதல், ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், சஸ்பென்ஸ் என அத்தனை விஷயங்களும் படத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ‘ஈட்டி’ படத்தை டிசம்பர் 4 ஆம் தேதி ரிலீஸ் வேலையில் பிஸியாகியிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.