‘வை ராஜா வை’ படத்துக்குப் பிறகு ப்ரியா ஆனந்த்தை வேறு புதுப்படங்களில் பார்க்க முடியவில்லை.
சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் இருக்கிறாரே என்று ரசிக மகா ஜனங்கள் கவலைப்பட்டிருந்த நேரத்தில் தான் அதே ‘வை ராஜா வை’ படத்தின் நாயகன் கெளதம் கார்த்தி தான் ஹீரோவாக நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்கு ப்ரியா ஆனந்த்தை சிபாரிசு செய்திருக்கிறார்.
”இந்தப்படத்துல எனக்கு ஜோடியா ப்ரியா ஆனந்த்தை போடுங்கன்னு ஹீரோ கெளதம் கார்த்தி சார் தான் சொன்னார். நாங்க கூட முதல்ல யோசிச்சோம். ஆனா நல்ல வேளை அந்தப் பொண்ணு எங்க படத்துல நடிச்சது உண்மையிலேயே நல்லதாப்போச்சு. படத்துல அவர் ஹீரோவோட சிலம்புச் சண்டை போடுவார். ஒரு பெரிய கிணத்தை அசால்ட்டா தாண்டுவார், எதுக்குமே டூப் போடாம ரிஸ்க் எடுத்து நடிச்சார். இப்படி ஷூட்டிங் ஸ்பாட்ல அவ்ளோ தூரத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிச்சிக் கொடுத்தார் என்றார் தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ்.
”தென் மாவட்டங்கள்ல பிரபலமா இருக்கிற சிலம்பக் கலையை பத்திதான் சொல்லுது. ஹீரோவுக்கும் வில்லனுக்கு நடக்கிற சிலம்புச் சண்டைப் போட்டியில ரெண்டு பேருக்கும் மோதல் ஆரம்பிக்குது. அதனால ஹீரோவுக்கு ஏற்படுகிற பிரச்சனைகளையும், அதிலிருந்து அவர் தப்பிக்க நினைக்கிறப்போ ஒரு சவாலில் ஜெயிக்க வேண்டிய நிர்பந்தம் ஹீரோவுக்கு ஏற்படுது. அதுல ஜெயிச்சு ஊர் மானத்தை காப்பாத்தினாரா இல்லையாங்கிறது தான் இந்தப்படம். முத்துராமலிங்கம் என்றாலே ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையைப் பேசுகிற படமா என்றால் அப்படி இருக்காது. படம் முழுக்க சிலம்பக் கலையின் பெருமையைத்தான் சொல்லியிருக்கோம்” என்று படத்தின் கதைக்களத்தைப் பற்றிச் சொன்னார் இயக்குநர் ராஜதுரை.
இந்தப்படத்தின் கதையை கேட்ட மாத்திரத்தில் டைட்டிலும் பிடித்துப் போய் இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா.
அதோடு படத்தில் ஒரு பாடல் கணீர் குரலில் இருக்க வேண்டும் என்று இயக்குநர் ராஜதுரை ஆசைப்பட உலகநாயகன் கமல்ஹாசனை அழைத்து அந்தப்பாடலை பாட வைத்தாராம் இசைஞானி இளையராஜா.
”தெற்கு தேச சிங்கமடா… முத்துராமலிங்கமடா…” என்கிற குரலில் கணீரென்று ஒலிக்கிறது அந்தப்பாடல்.
இப்படி ஒரு பாட்டை வெச்சிட்டு படத்துல சாதிப்பெருமை இல்லேன்னா சொன்னா யார் நம்புவா?