இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் படம் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் சமீபத்தில் வெளியாகி, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தினை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். மேலும் சில முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இப்படத்தின் சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்து காண்பிக்கப்பட்டது.
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, வேல்முருகன், தமிழன் பிரசன்னா, ஆளூர் ஷா நவாஸ், மல்லை சத்யா ஆகியோர் உட்பட பெரியாரிய, கம்யூனிச இயக்கத்தினர் பலர் கலந்துகொண்டு படம் பார்த்தார்கள்.
இவர்களுடன் இயக்குநர் சேரன், நடிகைகள் ஜனனி, மும்தாஜ், ஆர்த்தி, நடிகர் சென்றாயன் உள்ளிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களும் படம் பார்த்தார்கள்.
இயக்குநர் சேரன், இயக்குநர் அதியன் ஆதிரையையும்.. தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், ஒளிப்பதிவாளர் கிஷோர்குமாரையும் பாராட்டி வாழ்த்தினார்.
“குண்டு வெடித்தால் நிகழும் பாதிப்பை விட கொடூரமான நிகழ்வுகளுடன் மக்களுடன் வாழ்கிறோம். காதலால் வரும் ஜாதிப்பிரச்னை, பணக்கார வர்க்கம், முதலாளித்துவம், வர்த்தக அரசியல் எல்லாமே நம்மை அழிக்கும் குண்டுகள்தான்..
உயிரின் இழப்பின் வலியை எப்போது இந்தசமூகம் உணருமோ அதுவரை இதுபோன்ற படைப்புகள் வந்துகொண்டே இருக்கும்.. அதுவே சமூகத்தின்பால் மற்ற உயிர்களின்பால் அன்பு காட்டும் நேசிக்கும் கலைஞர்களின் அக்கறை. அதை முன்னெடுத்திருக்கும் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள். கைகோர்ப்போம்” என்றார்.