படத்துக்கு டைட்டில் வைப்பது மட்டுமல்ல, அதே படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பதற்கும் இயக்குநர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அழகாக இருந்தால் போதும் என்கிற ஒற்றை எதிர்பார்ப்பில் வட இந்திய நடிகைகளை தங்கள் படங்களில் கமிட் செய்யும் இயக்குநர்கள் அதற்கு நடிப்பு வருகிறதா? டயலாக் பேச முடிகிறதா? என்பதை பார்ப்பதே இல்லை.
அப்படிப்பட்ட நடிகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டாலும் தமிழ் பேசும் நடிகைகளுக்கு யாருமே சான்ஸ் தருவதில்லை என்று குமுறினார் ‘காக்கா முட்டை’ படப்புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாகத் தயாரித்துள்ள படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷூம் ஒரு நாயகி.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்தார்…
“எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் பாஸ்கர் சாருக்கு நன்றி. தமிழ் பேசி நடிக்கும் நடிகை என்பதால் என்னை தேர்வு செய்ததாகக் கூறினார். தமிழ் பேசும் நடிகைகளுக்கு இங்கே அவ்வளவாக வாய்ப்பு தருவதில்லை. இந்த வகையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.
‘ஹலோ நான் பேய்பேசுறேன்’ படம் நல்லதொரு பொழுதுபோக்கு படம். இதில் எல்லாமே இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் சிரிப்பை வரவழைப்பவை. நடித்த போதே எங்களுக்கு சிரிப்பு வந்தது. இதில் நான் விடிவி கணேஷின் சகோதரியாக நடித்திருக்கிறேன்.
நான் இதுவரை சரியானபடி நடனம் ஆடி நடித்ததில்லை. இதில் சிரமப்பட்டு ஆடியிருக்கிறேன். ‘சில்லாக்கி டும்மா’ பாடலில் பிணத்தின் மீது எல்லாம் ஏறி நடனம் ஆடியிருக்கிறேன். எனக்கு ஜோடி வைபவ். படத்தில் அது புதிதாகத் தெரியும். இதில் நாங்கள் ஆடும் சாவுக்குத்து பக்கா லோக்கலாக இருக்கும், அது பேசப்படும். இது ஒரு நல்ல அனுபவம் என்றார்.
முன்னதாக பேசிய இயக்குநர் பாஸ்கர் தமிழ் பேசத் தெரிந்ததால் ஐஸ்வர்யாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன் என்றார்.
மற்ற இயக்குநர்களும் கேட்டுக்கங்கப்பா…