ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அகிம்சை வழியில் போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் ஆளுகிற அரசு எப்படி கையாண்டது? என்பது ஏழாவது நாளில் வெட்ட வெளிச்சமாகியது.
போராட்டக் களத்துக்குள் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டதால் தடியடி நடத்த வேண்டியதாயிற்று என்று அதற்கான காரணம் சொல்லப்பட்டாலும் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
அதே சமயம் இனி இதுபோன்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறக்கூடாது என்பது போலவே அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் இருந்து வருகின்றன.
குறிப்பாக போராட்டம் நடந்த மெரினாவில் வருகிற பிப்ரவரி 12-ம் தேதி வரை யாரும் நுழையக் கூடாது என்று 144 தடை விதித்திருப்பதும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் சிம்பு போராட்டக்காரர்களை விடுவிக்கக் கோரி ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நேற்று நிருபர்களை சந்தித்த சிம்பு பேசியதாவது :
“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பங்கெடுத்து தமிழகத்தில் வேறொரு புரட்சி நடைபெற்றுள்ளது.
சட்டம் நிறைவேற்றப்பட்டப் போது, அரசாங்கத்திலிருந்து யாராவது ஒருவர் வந்து மக்களிடம் எடுத்துச் சொல்லியிருந்தால் இப்பிரச்சினை இந்தளவுக்கு வந்திருக்காது.
6 நாட்கள் மெரினாவுக்கு வராத காவல்துறை, அன்று காலை மட்டும் வரக்காரணம் என்ன? சட்டம் வந்து விட்டது கலைந்து சொல்லுங்கள் என்று காவல்துறை சொன்ன போது, கொஞ்சம் நேரம் கொடுங்கள் என அங்கிருந்தவர்கள் கேட்டபோது அவர்களை இழுத்து ஏன் அப்புறப்படுத்த வேண்டும்? அது மட்டும் நடைபெறவில்லை என்றால் வன்முறையே வந்திருக்காது.
மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட புகைப்படங்களை வைத்து தான் அவர்களை கைது செய்தோம் என்று சொல்கிறார்கள். அதே போன்று காவல்துறை அதிகாரிகளும் தீ வைத்த வீடியோக்கள் உள்ளது. அவர்கள் மீதெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை விடுவிக்கும் வரை நான் அகிம்சை வழியில் போராடுவேன். இல்லையெனில் என்னையும் கைது செய்யுங்கள். என்ன கைது செய்ய முடியாவிட்டால் கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள்.
மீனவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசே ஒரு நாள் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட அனுமதி வழங்கி அறிவிக்க வேண்டும்.
நான் அரசியலுக்கு வந்து தான் கேள்வி கேட்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். என்றைக்குமே அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலுக்கு வந்து தான் நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது” என்று ஆவேசமாக பேசிய சிம்பு தெருவில் இறங்கி டான்ஸ் ஆடியாவது நிதி திரட்டி வன்முறையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி செய்வேன்” என்றார்.