அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்திருந்தார் கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார்.
வெற்றியை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வதற்காக நிருபர்களை சந்தித்தது படக்குழு.
சந்திப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து பேசியதாவது… ”நானும், அதர்வாவும் நீண்ட காத்திருத்தலுக்கு பிறகு இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம். ருத்ரா கதாபாத்திரத்தை பற்றி பேசும்போது பெரிய நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு எழுந்தது.
ஆனால் அவர்கள் சாயல் படத்தில் வந்து விடுமே என்று பயந்தேன், அதனால் தான் அனுராக் சாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும்போது தான் என் முடிவு பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவருக்கு டப்பிங் பேச வைக்க மகிழ்திருமேனி சாரை கேட்டோம். 12 நாட்கள் மிகவும் பொறுமையாக டப்பிங் பேசிக் கொடுத்தார். நயன்தாரா ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். கதை எழுதும்போதே விஜய் சேதுபதி சார் தான் நடிக்கணும் என விரும்பினேன். அவர் திரையில் தோன்றும்போதே விசில் பறக்கிறது.
‘நாளைய இயக்குனர்’ நாட்களில் அபிராமி ராமநாதன் சார் என் குறும்படத்தை பாராட்டி சினிமாவில் சீக்கிரமாக படம் இயக்க சொன்னார். இன்று அவர் இந்த படத்தில் பங்கு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
சந்திப்பில் வழக்கம் போல நாயகி நயன்தாராவைத் தவிர்த்து நாயகன் அதர்வா முரளி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.