‘இரண்டு வானம்’ படத்தின் ‘வெள்ளிச்சுடரே’ பாடல் வெளியீடு!

சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது.

இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும் குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும் இதனோடு இணைந்து பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன.

திபு நினன் தாமஸின் இசை நுணுக்கம் பாடலுக்கு தனித்துவமான அனுபவத்தை தருவதோடு, பாடலை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும் சிறப்பு சேர்க்கும் திறமை அவருக்கு உண்டு. ‘கண்கள் ஏதோ’, ‘பூவே’ போன்ற பல ஹிட் பாடல்களில் இதை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். தற்போது ‘வெள்ளிச்சுடரே’யும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்து, இசை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடலாக மாறியுள்ளது.

’முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘இரண்டு வானம்’. இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

’வெள்ளிச்சுடரே’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Actor Vishnu VishalActress mamitha baijuIrandu Vaanam movie