பிரபல நகைச்சுவை நடிகரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான “சோ” ராமசாமி
டிசம்பர் 7 ந் தேதி அதிகாலை 4.05 க்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.
பத்திரிகை உலகில் பலருக்கு ஆசானாக விளங்கிய சோ ராமசாமி, அரசியல் விமர்சகர் என்பதில் பெயர் பெற்றவர். துக்ளக் பத்திரிகையின் சிறப்பான அரசியல் விமர்சனம் அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதற்கு காரணம் இவரது வலிமையான எழுத்துக்களே.
சிறிது காலமாகவே நோய் வாய்ப்பட்டிருந்த சோ ராமசாமி பலமுறை மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை முதல்வர் ஜெயலலிதா சென்று பார்த்தார், அதன் பின்னர் உடல் நலம் தேறி வந்த அவர் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே அப்போலோவில் மீண்டும் உடல் நலக்குறைவால் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி முதல்வர் உயிருக்கு போராடும் செய்தி கேட்டு இவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ஐசியூவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் சற்று முன்னர் காலமானார்.
மறைந்த சோவுக்கு மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர். பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சோ.
துக்ளக் பத்திரிக்கையின் ஸ்தபகரான இவர் அதில் எழுதிய அரசியல் கட்டுரைகள் பிரபலமானவை. நையாண்டி கட்டுரைகளை எழுதுவதில் வல்லவர். சாதாரணமாக பேசும்போதே நகைச்சுவையும் நையாண்டியும் இவரது வார்த்தைகளில் வந்து விழும்.
அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் வகுத்து தந்தது.
1934 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப்பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலை அறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார்.
பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.
இவருக்கு 1966 – ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். பின்னர் திரைப்படத்துறையில் ஈடுபட்டு சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கினார்.
திரைப்படத்தில் இவர் நகைச்சுவையாக அரசியலை கிண்டலடிக்கும் காட்சிகள் பிரபலமாக ரசிக்கப்பட்டது.
‘தங்கப் பதக்கம்’ படத்திலிவரது கவுன்சிலராக வரும் அரசியல்வாதி வேடம் அன்றைய ரசியலை தோலுரித்து காட்டியது. திராவிட அரசியலை முக்கியமாக விமர்சித்தவர்.
அதே நேரம் திராவிட கட்சி தலைவர்களான அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர்.
ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் போன்றவர், அவருக்கு அரசியல் வழிகாட்டி என்று குறிப்பிடுவர்கள்.
1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார். துக்ளக் என்ற இவரது திரைப்படம் பிரபலமானது. இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்கு மேல் மேடையேறின.
‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கி சொந்தமாக நடத்தி வந்தார்.
அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றியவர், சோ ராமசாமி ஆவார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கத்து அறையிலேயே சிகிச்சை பெற்று வந்த சோ ஜெயலலிதா மறைந்த தகவல் தெரியாமலேயே இறந்து போனது தான் பெரும் சோகம்!
சோவின் உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.