தண்ணீர் விடியல்’ – காவேரிக்காக கபிலன் வைரமுத்து எழுதிய கவிதை!

காவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் தண்ணீர் விடியல் என்ற பெயரில் கவிஞர் கபிலன் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

தண்ணீர் விடியல்

உரிமை நீரை கேட்டோம்
வறுமை மாற கேட்டோம்
ஆண்மை உள்ள மேலாண்மை
அமையத் தானே கேட்டோம்

இந்தியாவின் அடிவாரம்
இதயம் வெடித்து அழுகிறோம்
ஆயிரமாண்டு அதிகாரம் – அதை
இழக்க மாட்டோம் எழுகிறோம்

இணையம் முகநூல் வளையம் தாண்டி
இளைஞர் கூட்டம் வருகிறோம்
தெருவை உறவை இரவைத் தாண்டி
தமிழின் பெயரால் இணைகிறோம்

அரசியல் காக்க அல்ல – நம்
அரிசியை காக்க நினைக்கிறோம்
நாளைய வேர்கள் நோக்கி – நம்
நதியை திருப்பிட விழைகிறோம்

காவிரி படுகையில் விவசாயம்
அதுவே உடனடி காரியம்
சிதறி கிடக்கும் சிங்கங்கள்
ஒன்றானால்தான் வாரியம்

Cauvery issueCauvery Mangement BoardKapilan Vairamuthu
Comments (0)
Add Comment