அப்படித்தான் மூத்த நடிகர் சிவக்குமாரை விழா மேடையில் கலாய்த்து அவருடைய மகனும், நடிகருமான கார்த்தியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் நடிகை கஸ்தூரி.
ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், சதீஸ் மற்றும் பலர் நடிப்பில் கேசி சுந்தரம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தான் ‘ஜூலை காற்றில்’. காவ்யா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சரவணன் பழனியப்பன் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி நடிகர் கார்த்தியை பேச அழைத்தார், அப்போது ”உங்க அப்பா இங்கே இல்லை. வாங்க உங்களோடு ஒரு செல்ஃபி எடுக்க போறேன்” என்றார். அதைக் கேட்ட கார்த்தி ”எதற்கு இது தேவையில்லாத ஒரு விஷயம்” என்றார்.
பின்னர் மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்தவர், ”செல்ஃபி எடுப்பது என்பதில் மரியாதையே இல்லாமல் போய் விட்டது. ஒருவரிடம் அனுமதி கேட்டு செல்ஃபி எடுக்க வேண்டும் என்கிற நாகரீகம் கூட இல்லாமல் செல்போனை மூஞ்சிக்கு முன்னாடி கொண்டுபோய் நிறுத்துவது நியாயமான செயல் அல்ல. மரியாதை தெரியாத அளவிற்கு நாம் மாறி விட்டோமா என்று வருத்தமாக இருக்கிறது” என்று வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்தார்.
முன்னதாக விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த தூத்துக்குடி சுப்ரமணியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை நடிகர் கார்த்தி வழங்கினார். இந்த நிதியினை உயிர்நீத்த சுப்ரமணியன் அவர்களின் சகோதரி சித்ரா அவர்கள் கார்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.
மேலும் தயாரிப்பாளர் சரவணன் பழனியப்பன் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த 44 வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஜுலைக்காற்றில் படக்குழுவின் சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.