சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்த இப்படத்தை துவக்கத்தில் இயக்குனர் கெளதம் மேனன் தான் தனது ‘ஒன்றாக’ நிறுவனம் சார்பில் ஆரம்பித்து வைத்தார். ஆனால் இப்போது படத்திலிருந்து அவரை முழுமையாக நீக்கி விட்டு, இன்னொரு தயாரிப்பாளரான பத்ரி கஸ்தூரி வசமே முழுப்படத்தையும் ரிலீசுக்காக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.
ஏற்கனவே கெளதம் மேனன் உடனான கருத்து வேறுபாடு பற்றியும், அதனால் தனது பட ரிலீஸ் தாமதமாவது பற்றியும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் இயக்குனர் கார்த்திக் நரேன்.
இன்று நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து அவரிடம் நேரடியாக ஒரு நிருபர் கேள்வியை முன் வைத்தார்…
அப்போது பேசிய கார்த்திக் நரேன் “என்னோட ‘துருவங்கள் 16’ படத்தைப் பார்த்து விட்டு போன் போட்டு பாராட்டினார் இயக்குனர் கெளதம் மேனன். பின்னர் ஒரு வாரம் கழித்து நேரில் சந்திக்கலாம் என்று கூப்பிட்டார்.
அந்த சந்திப்பின் போது நீங்கள் விரும்பினால் என்னுடைய கம்பெனியிலேயே அடுத்த படத்தை இயக்குங்கள் என்றார். அவரை ரோல் மாடலாக நினைத்து தான் நான் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தேன். அப்படிப்பட்டவருடன் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிகிற வாய்ப்பு கிடைக்கும் போது அதற்கு உடனே சம்மதம் சொன்னேன்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்து சில நாட்களுக்குப் பிறகு அவரால் படப்பிடிப்பை நடத்த பணம் புரட்ட முடியவில்லை. இதனால் என்னுடைய பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. அதன் பிறகு இன்னொரு தயாரிப்பாளரான பத்ரி கஸ்தூரி தான் எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டார்.
எனக்கும் கெளதம் மேனன் சாருக்கும் இடையேயான பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ”எப்போதுமே நமக்குப் பிடிச்சவங்க ஏமாற்றும் போது நம்ம மனசு வலிக்குது”. அப்படி ஒரு அனுபவம் தான் கெளதம் மேனன் உடனான சந்திப்பிலும் எனக்கு கிடைத்தது.
இன்னொரு தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி என்னை முழுமையாக நம்பினார். அதனால் தான் என்னுடைய அடுத்த படமான ‘நாடக மேடை’ படத்தையும் அவருடைய நிறுவனத்திலேயே இயக்குகிறேன் என்றார்.
இந்த மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி நரகாசூரன் திரைப்படம் ரிலீசாகிறது.