சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், ” மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன்.
மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த ‘கருப்பு’ படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.

நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌

இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் ‘கருப்பு’ வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ…. அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்.
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்… நடிகராகவும்… வர்ணனையாளராகவும்… இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.

இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்… இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌

படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ” என்றார்.‌

Actor Suryadirector RJ BalajiKaruppu movie