தீபாவளிக்கு ‘கொடி’ பலமாக அசையும் முன்பே புயலைக் கிளப்ப ஆரம்பித்து விட்டது அது சம்பந்தமான பர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் உள்ளிட்ட புரமோஷன் இத்யாதிகள்.
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடமேற்று நடிக்கும் படமென்பதால் சினிமா ரசிகர்கள் அத்தனை பேர் முகத்திலும் முன்னெப்போதும் இல்லாத எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பு.
ஒரு தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷாவும், இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக மலையாளத்திலிருந்து அனுபமாவையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.
இன்று நடைபெற்ற கொடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் தனுஷ், படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன், மதன், கோபால் ஜேம்ஸ், நாயகி அனுபமா பரமேஸ்வரன், படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், நடிகர் மாரிமுத்து என ‘கொடி’யின் மொத்த டீமும் ஆஜராகியிருந்தார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் வெற்றிமாறன் ”இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் முதன் முதலில் கதை சொல்லும் போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன். அந்தக் கதையை என்னுடைய நிறுவனத்தில் படமாக தயாரித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த படத்தில் பெயருக்கு தான் தயாரிப்பாளர். நான் தனுஷ் சாரிடம் உங்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டவுடன். தனுஷ் சார் உடனே துரை செந்தில் குமார் என்னிடம் கூறியுள்ள கதையை நீங்கள் தயாரியுங்கள் என்று கூறினார். இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக இருந்த தனுஷ் சாருக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூற வேண்டும் என்றார்.
”இதுவரை நான் நடித்த திரைப்படங்களான ”புதுப்பேட்டை” போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு மிக சிறந்த இசையை கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி. நான் ‘குக்கூ’ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை உற்று நோக்கி வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி. இப்படம் நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேட திரைப்படம் இப்படத்தின் கதையை இயக்குநர் துரை செந்தில்குமார் என்னிடம் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து நடித்தேன். படமும் மிகச்சிறப்பாக வந்துள்ளது,
இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா? அல்லது அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா? என்பதை நீங்கள் திரையில் வந்து பார்க்கும் போது உங்களுக்கு புரியும், பிடிக்கும். இப்படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியமான திரைப்படமாக இருக்கும்” என்றார் நாயகன் தனுஷ்.
‘கொடி’ வசூலிலும் கொடி கட்டிப் பறக்க தயாராகி விட்டது!