செட்டிலானது ஆந்திராவாக இருந்தாலும் மூச்சுக்கு முன்னூறு தடவை என்னோட தலைவர் ”புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்” தான் என்கிறார் இயக்குநர் தேஜா.
இவரது இயக்கத்தில் தெலுங்கில் ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’ என்ற பெயரில் வெளியாகும் திரைப்படம் தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ ஆக வெளியாகப் போகிறது. ராணா, காஜல் அகர்வால், கேத்ரீன் தெரசா, மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை சமீபகால அரசியல் சூழல்களையும் முழுமையாகவும், துணிச்சலாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் தேஜா.
”நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில தான். அதுக்கப்புறம் பாலிவுட் போயிட்டேன். அங்க இருந்தப்ப தான் எனக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் வந்துச்சு. என்ன தான் தெலுங்கு இண்டஸ்ட்ரியில இருந்தாலும் என்னோட குரு எம்.ஜி.ஆர் தான். நான் அவரோட தீவிர ரசிகன். இன்னைக்கும் எந்த ஒரு தெலுங்கு படத்தை இயக்கினாலும் ஏதாவது ஒரு காட்சியிலாவது பின்னணியில் எம்.ஜி.ஆர் பாடலை ஒலிக்க விட்டே ஆகணும்னு மியூசிக் டைரக்டர்கிட்ட சொல்லிடுவேன்.
தலைவர் வழியில நடக்கும் நான் இன்றைக்கும் என்னோட நிஜ வாழ்க்கையில் தண்ணி, தம்முன்னு எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் தான் இருக்கிறேன் என்று சிலாகிக்கும் தேஜா படத்தின் டைட்டிலுக்கு ஏற்றாற் போலவே படத்தில் பல அதிரடி அரசியல் சிச்சுவேஷன்களை வைத்திருக்கிறாராம். அதில் முக்கியமானது தான் கூவத்தூரில் நடந்த கூத்துகள்.
தமிழகத்தின் சில மாதங்களுக்கு முன்பு அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்த கூத்துகள் எல்லாம் நடந்ததல்லவா? அது அப்படியே படத்தில் இருக்கிறதாம். ஆனால் இதெல்லாம் நான் அந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே யோசித்தது என்கிறார் தேஜா. ஹீரோ ராணாவை பார்த்து ”நான் சி.எம் என்பதை மறந்து விடாதே” என்று முதல்வர் கேரக்டர் சொல்ல, அதற்கு ராணா ”நூறு எம்.எல்.ஏக்களை கொண்டு போய் ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் சி.எம் தாண்டா” எனச் சொல்லுவாராம்.
இதற்காக முதலில் ஸ்டார் ஹோட்டலில் காட்சிகளை எடுத்து விட்ட தேஜா பிறகு தமிழ்நாட்டில் நடந்த சம்பவத்தைப் பார்த்ததும் அப்படியே ஒரு ரிசார்ட்டில் நடப்பது போல மாற்றி எடுத்து சேர்த்து விட்டு படத்தை தமிழிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டாராம். காட்சிகள் மட்டுமில்லாமல் படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனங்களும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை பிரதிபலிப்பதாக இருக்கும் என்கிறார் தேஜா.
அப்போ இந்தப்படம் ரிலீசானா கூவத்தூர் இன்னும் நாறும் என்பது மட்டும் உறுதி!