இயன்றதைச் செய்வோம், அதையும் இன்றே செய்வோம் : களமிறங்கியது நடிகர் சங்கம்

”மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும் செய்ய இயலாது, அரசு தான் அதை செய்ய வேண்டும்” என்று நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரோ பேட்டி அளித்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.

இதனால் கடுப்பான ரசிகர்களில் சிலர் ”அப்படியானால் இனி திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்” என்று எந்த நடிகரும் சொல்ல வேண்டாம், ”இந்த சோப்பைப் போட்டுக் குளித்தால் மேனி பளபளக்கும்” என்று எந்த நடிகையும் ரசிகர்களுக்கு அட்வைஸ் தரத்தேவையில்லை என்று பதில் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரும் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை, நடிகர் சங்கம் சார்பில் இப்படி சொல்லப்பட்ட கருத்து முற்றிலும் தவறான தகவல்  என்று நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மழையால் பாத்திக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

​வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சார்ந்த, சிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு ”The Environmentalist Foundation ofIndia” என்ற NGO மூலமாக நமது தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட பணியாக சில உதவிகளை மேற்கொண்டுள்ளது.

அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் புழங்குவதற்கு தேவையான பாய், பெட்சிட் போன்றவைகளும் மாற்றுத் துணிகளுக்காக புடவை, வேட்டி மற்றும் டி சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து திரு.எஸ்.வி.சேகர், திரு.பூச்சிமுருகன், திரு.மனோபாலா மற்றும் திருமதி.ரோகிணி அவர்கள் உதவியுள்ளனர். மேலும், நடிகர் திரு.அருள்நிதி அவர்கள் 1,000 பெட் ஷீட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்தைச் சார்ந்த திருமதி. குட்டிபத்மினி, செல்வி.கோவைசரளா, திருமதி.லலிதாகுமாரி, திருமதி.சோனியா, திரு.மனோபாலா, திரு.பசுபதி, திரு.உதயா, திரு.ஹேமச்சந்திரன், திரு.அயுப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள், அலுவலக மேலாளர் திரு.வி.பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பாடுபட்டுள்ளானர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தை சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது நடிகர்சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு.அயுப்கான் மற்றும் திரு.ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளது. என்று நடிகர் சங்கம் விளக்கம் கொடுத்திருக்கிறது.

Nadigar SangamNadigar Sangam Help
Comments (0)
Add Comment