சினிமா இசை மட்டும் தான் மக்களுக்கான இசையா? – இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

மிழகத்தில் சினிமா தவிர்த்த இசையும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்படுவதில்லை.

ஆனால் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்த வெளி இசை நிகழ்ச்சி அதை மாற்றியது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கேஸ்ட்லெவ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விவாதங்களையும் உருவாக்கியது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் ‘மெட்ராஸ் மேடை’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்.

சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே மாதம் 19ம் தேதி (19.05.2018) சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறுகிறது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ளும் இடவசதி கொண்ட வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த மாபெரும் இசைக் கொண்டாட்டத்திற்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பால் ஜேக்கப் சின்னப்பொண்ணு குழுவினர், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், ஓஃப்ரோ, டோபாடெலிக்ஸ், சீயன்னார், ஜடாயு, ஒத்தசெவரு… ஆகிய 7 குழுக்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சியில் ஃபோக், கானா, ப்ளுஸ், ஹிப் ஹாப், ஜாஸ், பிக் பேண்ட் ஆர்க்கெஸ்ட்ரா, கர்நாடிக், எலெக்ட்ரானிக் மியூசிக்… என அனைத்து வகையான இசை வடிவங்களும் கலந்த இசை நிகழ்ச்சியாக அமையப்போகிற மெட்ராஸ் மேடை சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார்கள், நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பால் ஜேக்கப், டென்மா மற்றும் சந்தோஷ்.

‘மெட்ராஸ் மேடை’ நிகழ்ச்சி பற்றி அறிமுகம் செய்து வைத்து இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்,

”சினிமா என்பது நிறைய கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு மீடியம். இங்கு எல்லோருக்கும் பயந்து கொண்டு தான் கலைஞர்கள் ஒரு படைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆனால், தனி இசைக் கலைஞர்களுக்கு அப்படியில்லை, அவர்களுக்கு எல்லையற்ற சுதந்திரமுள்ள ஒரு கலை வடிவம் வாய்த்திருக்கிறது. அந்த கலை வடிவங்களைப் பயன்படுத்தி எதைப் பேசுகிறோம், எப்படியான உரையாடல்களை உண்டாக்குகிறோம் என்பதே இங்கு முக்கியம். அதற்கான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது தான் “THE CASTELESS COLLECTIVE” . எதிர்பார்த்ததைப் போலவே அந்நிகழ்ச்சி சமூகத்தில் பல விவாதங்களை உண்டாக்கியது.

அதைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் மேடை’ நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருக்கிறது. கவனிக்கப்படாத தனியிசைக் கலைஞர்கள் பலர் இதில் பங்கு பெறுகிறார்கள். இங்கு கலை இலக்கியத்தை கர்வமாகவும், அரசியல் புரிதலுடனும் அணுகிக் கொண்டாடக் கூடிய நவீன நாடகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவையாவும் நம் கவனத்திற்கு வருவதேயில்லை. அதைப் போல அல்லாமல், இந்தக் கலைஞர்களை மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் தனியிசைக் கலைஞர்கள் மீதான பொதுப்புத்தியின் பார்வையை மாற்றும் நிகழ்வாகவும் இந்த ‘மெட்ராஸ் மேடை’ இருக்கும் என நம்புகிறேன்.

சினிமாவின் இசை மட்டும் தான் மக்களுக்கான இசை என்பதாக ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பிம்பத்தை இந்த ‘மெட்ராஸ் மேடை’ உடைக்கும். வாழ்க்கையின் சூழல் சார்ந்து, அதன் அர்த்தத்துடனே கூடிய விடுதலை உணர்வை பாடக்கூடிய இடமாக இந்த ‘மெட்ராஸ் மேடை’ அமையும். ‘மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்’ மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு கண்டிப்பாக ‘நீலம் பண்பாட்டு மையம்’ தோள் கொடுக்கும்” என்றார் இயக்குனர் பா.ரஞ்சித்.

Madras MedaiMadras Medai Mega Music Concert in Chennai Press Meet NewsMega Music Concert in ChennaiPa.ranjith
Comments (0)
Add Comment