எதையுமே வித்தியாசமாகச் செய்வதிலும், பேசுவதிலும் கெட்டிக்காரர் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன்.
அதனால் தான் அவர் நடிக்காத படமாக இருந்தாலும் அப்பட விழாவில் பார்த்திபனை எப்படியாவது கூட்டிக் கொண்டு வந்து விடுவார்கள் படக்குழுவினர். அவரும் நோ சொல்லாமல் வந்து அசத்தலாகப் பேசி விட்டுப் போவார். அப்படிப்பட்டவர் தன்னுடைய குருநாதரின் குருநாதர் பாரதிராஜா நடித்திருக்கும் பட விழா என்றால் வராமல் போவாரா?
இயக்குநர் இமயம் பாரதிராஜா – விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கியிருக்கும் குரங்கு பொம்மை இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த பார்த்திபன் வழக்கம் போல தனது குசும்பான பேச்சில் மட்டுமில்லாமல் வர்ணனையிலும் குரு பாரதிராஜாவை வாழ்த்தினார்…
”இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ்சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும்.
இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன்.
பாரதிராஜா நல்ல இயக்குநர்னு எல்லாரும் சொல்வாங்க. பாரதிராஜா சிறந்த மனிதர்னு சொல்வாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து.
கு / நல்ல குணவான்
ர / சிறந்த ரசனையாளர்
ங் / இங்கிதம் தெரிந்தவர்
கு / குவாலிட்டியானவர்
இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம் என்று பேசி கைதட்டலை அள்ளினார்.