ஜாக்கிசானும், டோனிஜாவும் நெருங்கிய நண்பர்கள், நினைத்தால் அவர்கள் இரண்டு பேரிடமும் கால்ஷூட் வாங்கி சீனப்படங்களையே தயாரிக்கலாம். ஆனால் தமிழ்சினிமா மீதுள்ள தீராக்காதலில் கோலிவுட் நோக்கி வந்திருக்கிறார் இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்தி வரும் ஜான்சுதிர் என்ற வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்.
2013 ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க ”ஏமோ குர்ரம் எகரா வச்சு” என்ற படத்தை தெலுங்கில் தயாரித்ததின் மூலம் அங்கு தயாரிப்பாளராக நேரடியாக களத்தில் இறங்கினார். அதற்கு பிறகு ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி ”விக்கி டோனர்” என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக் செய்தார்.
படைப்புலகில் சிறந்த கலைஞர்களை கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகின் மீது அதிக ஆர்வம் உண்டு என்பதால் இப்போது தமிழ் – தெலுங்கு இருமொழிப்படங்களாக அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்கிறார் தயாரிப்பாளர் ஜான்சுதிர். அதன்படி ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடிக்க ”கடைசி பெஞ்ச் கார்த்தி” என்ற பெயரில் தமிழிலும் ”மல்லி பிரேமிஸ்தே” என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார். தெலுங்கில் பரத் நேரடியாக கால் பதிக்கும் படம் இது.
அடுத்து உலகம் முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கத்தில், மரகதமணி இசையில் ”ஷோ டைம்” என்ற பெயரில் தெலுங்கிலும், ”காட்சி நேரம்” என்ற பெயரில் தமிழிலும் தயாரித்து வருகிறார். மூன்றாவதாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதன் துவக்க விழா விரைவில் நடைபெற உள்ளது.
இதைத் தவிர தென்னிந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ”காஞ்சனா 2” படத்தின் கொரியா, சைனா, தாய்லாந்த், ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி இருக்கிறார். ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கும் முதல் தயாரிப்பாளர் இவர்தான்.
இது மட்டுமில்லாமல் இந்திய கலைஞர்களை கொண்டு வெளிநாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை இந்தியாவிலும் பயன்படுத்தி உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் ஜான்சுதிர் சீனப்படங்களை தயாரிக்கவும் ஆசை இருக்கிறது. விரைவில் அதற்கான வேலையையும் ஆரம்பிப்பேன் என்றார்.