எப்போதெல்லாம் ரஜினி படத்துக்கு ரிலீஸ் தேதியை அறிவிக்கிறார்களோ? அப்போதெல்லாம் யாராவது ஒருவர் அவரது முந்தைய படங்களில் ஏதாவது ஒன்றை பஞ்சாயத்துக்கு கொண்டு வந்து அவரிடம் பணம் வாங்க முயற்சிப்பது வாடிக்கையாகி விட்டது.
சில வாரங்களுக்கு முன்பு காலா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள்.
இதோ கபாலி பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு என்னை ஏமாற்றி விட்டார் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மீது ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன் வைத்து விட்டார். அதோடு இந்தப் பிரச்சனையில் ரஜினி தலையிட்டு எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று சொன்னது தான் கூடுதல் ஹைலைட்.
இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தன் படங்களை வாங்கி நஷ்டப்பட்டவர்களுக்கு கொடுத்து பழக்கியதால் ஆளாளுக்கு அவரை மிரட்டி பணம் பறிக்க கிளம்பி விட்டார்கள் என்று வேதனையோடு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்… ”ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனென்றால் இந்த செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபால் என்பவருக்கு சாட்சி கையழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார். அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன.
இதுவரை, ரூ 61 லட்சம் அவருக்கு நேரடியாகவும், சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு நான் உதவியிருக்கிறேன்.
கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளர் நானே சொல்கிறேன் படம் வணிக ரீதியாக மாபெறும் வெற்றி பெற்றுள்ளது.
யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம், அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.
தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களை கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும் என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.