தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் துள்ளி விளையாடும் காலமிது. அப்படி ஒரு புதுமையான முயற்சி தான் ‘6 அத்தியாயம்’ என்ற திரைப்படம்.
பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படியல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளரும், ‘தொட்டால் தொடரும்’ பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.
‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர். ‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
எந்த விழாவாக இருந்தாலும் விஷாலுக்கு வெச்சு செய்வதற்கென்றே வரம் வாங்கி விட்டு வந்தவர் போல பேசும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த விழாவிலும் அவரை வழக்கம் போல வெச்சு செஞ்வது என்கிற முடிவோடு பேசினார்…
”சினிமா வியாபாரத்தை பற்றி பேசுகிறோம், படிக்கிறோம். ஆனால் அது அழிந்து போய்க்கொண்டிருக்கிறது. பர்மா பஜாரில் பத்து டிவிடி வாங்கினால் படம் பண்ணி விடலாம். படம் பண்ணி விட்டால் அதன்பின் கருத்து சுதந்திரம் என்று சமாளிக்கலாம். கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. காமராஜர் தோற்றதற்கு காரணம் சினிமா. மக்களிடம் நேர்மையாக ஒரு விஷயத்தை சொல்வது இல்லை. தவறான விஷயத்தை சொல்லி விட்டு பின்னர் கருத்து சுதந்திரம் என்று சொல்வது. இது எல்லாம் தவறான ஒன்று.
கதாசிரியர்களை மதிப்பதில்லை. காம்பினேஷனுக்கு தான் இங்கே மதிப்பு. இந்த படத்துக்கு எடுத்த முயற்சியை புரமோஷனிலும் எடுத்து சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் சினிமாவுக்கு இரண்டு புதிய பிஆர்.ஓக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டு சென்றால் போதும்.
சேரன் கொண்டு வந்த சி2ஹெச் ஏன் தோல்வி அடைந்தது? என்பதை பார்த்திபன் தான் பதில் சொல்ல வேண்டும். அவர்தான் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர். பைரசியை தடுத்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது. நடிகர்கள் தான் அதற்கு காரணமாக இருப்பார்களோ? என்ற சந்தேகம் இருக்கிறது.
ஒன்பது மாதங்களாக என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள்? ஸ்ட்ரைக்கை அறிவித்து பின்னர் முடித்தீர்கள். ஜிஎஸ்டிக்கு ஸ்ட்ரைக் அறிவித்தீர்கள். ஆனால் 2 சதவீதம் குறைத்தவுடன் வாபஸ் வாங்கினீர்கள்? தமிழ் சினிமா டிஜிட்டல் என்று தெரிந்து விட்டது. சேரனை ஆதரிக்காதது தமிழர் என்ற காழ்ப்புணர்ச்சி தான். சேரனை அழைத்து ஏன் பேச மறுக்கிறீர்கள்?
பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேருக்காகத் தான் சங்கம் நடக்கிறது. கோக்க கோலாவை எதிர்த்து வசனம் பேசும் ஹீரோ தான் கோக்க கோலா விளம்பரத்தில் நடிக்கிறார். ஆன்லைன் வியாபாரத்தை எல்லா தயாரிப்பாளர்களுக்கு விளக்கி இருக்கிறீர்களா? அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமா? எங்கள் தலைவர் க்யூப் கட்டணத்தை குறைக்க இருப்பதாக சொன்னார். ஆனால் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது. 32 ஆயிரமாக ஏறி விட்டது. கேபிள் டிவியில் ஒன்றரை கோடி எப்படி வரும்? ஒரிஜினல் சிடி மார்க்கெட்டை திறந்து விட்டால் தான் திருட்டு டிவிடி ஒழியும். அரசாங்கம் போலத்தான் இவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.
தியேட்டர்காரர்களிடமிருந்து மூன்று மாதங்கள் கழித்து தான் வசூல் விபரம் வருகிறது. இது உடனே கிடைக்க ஆவண செய்தால் என்ன? இதுப்போன்ற என்னுடைய ஆதங்கத்தை பார்த்திபன் அவர்கள் தான் சங்கத்திற்கு எடுத்து செல்ல வெண்டும். தீபாவளிக்கு பத்தாயிரம் கொடுக்கவும் பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுக்கவும் தான் சங்கமா? விஷாலுக்கு எதிராக ஏன் எப்போது பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு விஷால் உள்பட அனைத்து ஹீரோக்களுமே நண்பர்கள் தான்” என்றார் சுரேஷ் காமாட்சி.