இன்றைய கல்வி முறையைப் பற்றி பல கேள்விகளை எழுப்பும் கதையாக தயாராகியிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.
படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி ஜோதிகா நம்மோடு பேசியதாவது, ”எப்போதுமே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தி, சூர்யாவை வெச்சுத்தான் படம் பண்ணுவாங்க. எனக்குப் படம் பண்ணதில்லை. அதனால, நானே இந்தப் படத்துக்காக அவங்ககிட்ட போய் கேட்டேன்.
இயக்குநர் கெளதம் என்கிட்ட ரெண்டு மணிநேரம் கதையைச் சொன்னார். அவர் இந்தப் படத்துல சொன்ன மெசேஜ் எனக்குப் பிடிச்சிருந்தது. இது ஏற்கெனவே சிலர் சொல்லியிருந்தாலும், கெளதம் இந்தக் கதையை டிசைன் பண்ணியிருந்த விதம் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதுல ஒரு காதல் டிராக்கும் இருக்கு. அப்பா – மகள் உறவை ரொம்பப் புதுசா காட்டியிருக்கார். இப்போ நிறைய அறிமுக இயக்குநர்கள் கூட படம் பண்றேன். இவங்க எல்லோரும் ரொம்பத் தெளிவா இருக்காங்க. சமூக அக்கறையுடன் படம் எடுக்கிறது எப்படினு தெரிஞ்சு வெச்சிருக்காங்க.
படத்தோட டீசர் வெளியானதும் ஆடியன்ஸ் ரியாக்ஷன் என்னன்னு ட்விட்டரில் பார்த்தேன். நான் ட்விட்டர்ல கிடையாது. என் கணவருடைய போன்லதான் பார்த்தேன். டீசரைப் பார்த்த பலரும் ‘லேடி சமுத்திரக்கனி’, ‘சாட்டை’ படம் மாதிரி இருக்குனு கமெண்ட் கொடுத்திருந்தாங்க. அந்தப் படத்துல இருக்கிற மெசேஜ் ‘ராட்சசி’ படத்திலும் இருக்கலாம். இன்னும் 100 படம் அந்தக் கருத்தைச் சொன்னாலும், நம்ம சமூகத்துக்கு அது தேவைதான். அதே நேரத்துல, பெரிய பட்ஜெட் படங்கள் ஒரே மாதிரியான கதையோட வந்தாலும், அதைப் பத்தியெல்லாம் யாரும் பேசவும் சொல்லவும் மாட்டேங்கிறாங்க.
அகரம் பவுண்டேஷன்ல 99 சதவீத பசங்க அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்காங்க. அவங்ககிட்ட பேசும்போதுதான், பல அரசுப் பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்களே இல்லைனு தெரிய வந்தது. இப்படிப் பல பசங்க ஆசிரியர்களே இல்லாமதான் படிக்கிறாங்க. இப்படி ஒரு நிலையை அரசாங்கம் நமக்குக் கொடுத்துட்டு, எப்படி நீட் தேர்வு எழுதணும்னு எதிர்பார்க்கிறாங்கன்னே தெரியல!” என்று தன் மனக்கவலையை வெளிப்படுத்திப் பேசினார் ஜோதிகா.