சுமார் 550 கோடி ரூபாயில் தயாரான இந்தப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 15 மொழிகளில் வெளியானது. படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமாரும் நடித்திருந்ததால் இந்தியில் மட்டும் இப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
அறிவியல் த்ரில்லர் படமான இதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும், பாடல்களில் காட்டப்பட்ட பிரம்மாண்டமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அந்தளவுக்கு உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப்படத்தை உலகிலேயே அதிக தியேட்டர்களை கொண்ட சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது 2.0 திரைப்படம் சீனாவில் வருகிற ஜூலை 12-ம் தேதி வெளியாகப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்தப்படம் சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 56 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருக்கிறார்.
சீனாவில் ‘ரோபோ 2.0’ என்ற தலைப்போடு ரிலீசாகவுள்ள இத்திரைப்படம் சீன மொழி, ஆங்கில மொழிகளில் சப்-டைட்டில்களுடன் வெளியாகிறது.
கடந்த ஆண்டு சீனாவில் வெளியான அமீர்கானின் ‘டங்கல்’ ஹிந்தித் திரைப்படம் அங்கு 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.
அந்தப் படத்தின் சாதனையை 2.0 திரைப்படம் முறியடிக்குமா? என்பது ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.