சில படங்கள் தனது வெற்றிக்கான தகுதியை தானே நிர்ணயித்துக் கொள்ளும். சரியான கதாபாத்திரங்களில் சரியான நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதின் மூலம், ஒரு இயக்குனர் அந்த படத்தின் வெற்றியை உறுதி செய்வார்.
அந்த பட்டியலில் தற்போது இணைய இருப்பது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாக உள்ள “இரண்டாவது ஆட்டம்”.
திறமையான நடிகை, தமிழ் பேசத் தெரிந்த சென்னைப் பெண்ணான லட்சுமி பிரியா இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
“லட்சுமி ப்ரியா இந்தப் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சரத் சாருடன் இணைந்து பணியாற்றும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். அவருடைய புத்திசாலித்தனமும், அணுகுமுறையும் ஒரு சவாலான வழக்கை வெற்றிகரமாக தீர்க்க உதவுகிறது. அவரது கதாப்பாத்திரம் மிக சவாலானது, லட்சுமி ப்ரியாவின் திறமையும், உருவ அமைப்பும் நிச்சயம் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார் இயக்குனர் பிருதிவி.