ஓய்வெடுக்கப் போன இடத்தில் கூட ரஜினியின் நிம்மதியை கெடுப்பதில் சிலருக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை.
ஏற்கனவே ரஜினியின் உடல்நிலை சீரியஸ் கண்டிஷனுக்குப் போனதால் தான் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்து விட்டு நலமுடன் சென்னை வந்தார். இந்த ஒரு காரணத்துக்காகவே கபாலி, எந்திரன் 2 படப்பிடிப்புகளில் அவருடைய உடல்நலம் அக்கறையோடு பார்த்துக் கொள்ளப்பட்டது.
இருந்தாலும் இந்த இரண்டு படங்களில் இடைவிடாது நடித்ததால் ரஜினிக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டதையடுத்து தனது குடும்பத்தாருடன் ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றார் ரஜினி.
சரி போன இடத்திலாவது அவரை நிம்மதியாக ஓய்வெடுக்க விட்டார்களா? என்றால் அதுவும் இல்லை. அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் என்றார்கள்.
அது பொய், அப்பா ஓய்வெடுக்கத்தான் இங்கு வந்திருக்கிறார் என்று அவரோடு செல்பி எடுத்த புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டரில் வெளியிட்டார் மகள் செளந்தர்யா.
சரி இனிமேலாவது வதந்திப் பிரியர்கள் வாயை மூடுவார்கள் என்று பார்த்தால் இன்று இலங்கையைச் சேர்ந்த ஒரு இணையதளத்தில் ரஜினியின் உடல்நலம் குறித்து இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தியை பரப்பி விட்டு விட்டார்கள்.
வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தச் செய்தி ரஜினியின் குடும்பத்தாருக்கும் எட்டவும் ”ரஜினியின் உடல்நிலை நன்றாகத் தான் இருக்கிறது. அவர் இப்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார். அடுத்த வாரம் சென்னை திரும்புவார்” என்று வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
இதற்கிடையே இந்த தவறான செய்தியை பரப்பிய இணையதளம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை கோரி சென்னை சைபர் க்ரைமில் ரஜினி சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி நலமா இருக்கார்! : நீங்க உங்க உடம்பை பார்த்துக்கங்கப்பா…